சென்னை: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் வரை அரசு சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2016-ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையைத் தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் ஆய்வுகள் முடிவில் 900 பக்க அறிக்கையை ஊதிய குழுவின் தலைவர் ஏ.கே.மாத்தூர், 7-வது சம்பள கமிஷன் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களிடம் சமர்ப்பித்தார்.
அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் இந்த 7-வது சம்பள கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்..
23.55 சதவீத சம்பள உயர்வு..!
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சம்பளம், கொடுப்பனவு (allowance) மற்றும் ஓய்வூதிய ஆகியவற்றை இணைத்து மொத்த 23.5 சதவீத வரை சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என மாத்தூர் அவர்களின் 7வது சம்பள அறிக்கையைப் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த சம்பள கமிஷன் அறிக்கையுடன் இதை ஒப்பிடுகையில் சம்பளம் 16 சதவீதமும், கொடுப்பனவில் 63 சதவீதமும், ஓய்வூதியத்தில் 24 சதவீதம் அதிகமாகும்.
குறைந்தபட்ச சம்பளம்
மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சமாக 18,000 ரூபாய் சம்பளம் அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் APEX தரவரிசையில் இருக்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 2,25,000 ரூபாயும், அமைச்சரவை செயலாளர் மற்றும் அவர்களுக்கு இணையான தர வரிசையில் இருக்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 2,50,000 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாக அளிக்க வேண்டும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 லட்சம் கோடி
இப்புதிய சம்பள உயர்வை மாத்தூர் அவர்களின் பரிந்துரையில் எவ்விதமாற்றமும் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அரசுக்கு வருடத்திற்கு 1,02,100 கோடி ரூபாய் கூடுதல் செலவினமாகும்.
இதில் சம்பளத்தில் 39,100 கோடி ரூபாயும், கொடுப்பனவில் 29,300 கோடியும், ஓய்வூதியத்தில் 33,700 கோடி ரூபாயும் அதிகரிக்கும். இதனால் மத்திய மற்றும் ரயில்வே பட்ஜெட் பாதிக்கும்.
வருடாந்திர ஊதிய உயர்வு
மேலும் ஒவ்வொரு வருசம் ஊழியர்களுக்கு 3 சதவீத சம்பள உயர்வு அளிக்க வேண்டும் எனவும் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சம்பள முறை
மேலும் நடைமுறையில் இருக்கும் கிரேட் பே முறை சம்பள அளிப்பதிலும், நிர்ணயம் செய்வதில் மிகப்பெரிய அளவில் உதவிக்கரமாக இருந்தது. இந்நிலையில் இம்முறையை மேலும் மேம்படுத்த பே மாட்ரிக்ஸ் எனப்படும் புதிய முறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திறனுக்கு ஏற்ற சம்பளம்
மேலும் ஊழியர்களின் வேலைத் திறன் அடிப்படையிலான சம்பளம் அளிப்பதில் தரத்தை 'GOOD' என்பதில் இருந்து 'VERY GOOD' என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
MACP எனப்படும் வேலைத் திறன் வரையறைகளை எட்டாத ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அல்லது முதல் 20 வருட பணிக்காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படவும் கூடாது எனச் சம்பள கமிஷன் தெரிவித்துள்ளது.
மருத்துவக் காப்பீடு
அனைத்து ஊழியர்களுக்கு மத்திய அரசின் புதிய மருத்துவக் காப்பீடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதிய பெற்று அனைவருக்கும் இந்த அளிக்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் எனச் சம்பள கமிஷன் குழு தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம்
ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் நிலையான ஓய்வூதிய தொகையில் 24 சதவீத உயர்வை அறிவித்துள்ளது சம்பள கமிஷன். அதுமட்டும் அல்லாமல் என்பிஎஸ் (NPS) திட்டத்தையும் அமலாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பணிக்கொடை
பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.
வீட்டுக்கடன்
வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்துக் கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்.
ராணுவ சேவை ஊதியம்
ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்', ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6,000 இருந்து ரூ.15,500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4,200ல் இருந்து ரூ.10,800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.3,600 ஆக உயரும்.
ராணுவ வீரர்கள்
குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.
ஜனவரி
ஏ.கே.மாத்தூர் அவர்களின் தலைமையிலான சம்பள கமிஷன் குழுவின் 900 பக்கம் கொண்ட 7வது ஊதிய கமிஷன் அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த உடன் மத்திய அரசு வருகிற ஜனவரி 1 2016 ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யும்.
ஊழியர்கள்
இந்தச் சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.