சென்னை: இந்தியாவில் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட புல்லட் வாகன அறிமுகத்தால் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது.
2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் 40,769 வாகனங்களை விற்று விற்பனையில் 48 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு வெறும் 27,542 ஆக மட்டுமே இருந்தது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 350சிசி ரக வாகன விற்பனையில் 52 சதவீத உயர்வையும், 350சிசிக்கும் அதிகமான என்ஜின் சக்தி கொண்ட வாகன விற்பனையில் 13 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வெளிநாட்டுச் சந்தைகளில் மந்தமான விற்பனை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி வாகன எண்ணிக்கை 457 ஆக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 344ஆக இருந்தது.