சென்னை: 100 வருடங்களில் காணாத மழையைத் தமிழ்நாடு தற்போது சந்தித்து வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் சில பகுதிகளில் பெய்த இந்தக் கன மழை தற்போது வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் ஆள் அளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. 100இல் 75 சதவீத தரைதள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கார், பைக், மற்றும் பல விலை உயர்ந்த பொருட்கள் நாசம் செய்துள்ளது.
இதனால் காப்பீடு நிறுவனங்களுக்குச் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் கிளைம்கள் கோரப்பட உள்ளது.
வெள்ளப்பெருக்கு
சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூலம் அட்டோமொபைல், வீடு மற்றும் சொத்துகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வைத்துள்ள மக்கள் அதிகளவிலான இன்சூரன்ஸ் கோரப்பட உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
2,000 கோடி ரூபாய்
தற்போது உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் மழை வெள்ளத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்சூரன்ஸ் கோரப்பட உள்ளது எனத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல நிறுவனங்களில் இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
300 கோடி ரூபாய்
ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்கள், மோட்டார் வாகனங்களை வைத்துள்ளவர்கள் எனச் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு இன்சூரன்ஸ் கிளைமிற்காகக் கோரப்பட்டுள்ளது என யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியான மிலின்ட் காரட் தெரிவித்தார்.
பிற நிறுவனங்கள்
அதேபோல் நியூஇந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 47 கோடி ரூபாய், சோழமண்டலம் எம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் இழப்பீட்டுக்கான காப்பீட்டுத் தொகையை அளிப்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலி. இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீங்கள் கோரியதற்கான இழப்பீட்டை அளிக்கப் பல காரணங்கள் கூறலாம்.
இதனை எப்படிக் கையாளுவதென்று முன்கூடியே முடிவு செய்துகொள்ளுங்கள்.