டெல்லி: ஊழியர்களின் சேமலாப நிதி சேவையில், சேமிப்புக் கணக்கிற்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை, ஈபிஎஃப்ஓ அமைப்பு 2015-16-ஆம் நிதியாண்டிலும் 8.75 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வேண்டுகோள் தெரிவித்துள்ளது.
சேமலாப கணக்கு (Provident fund) வைத்துள்ள சுமார் 5 கோடி வாடிக்கையாளர்கள் இதன் மூலம் தங்களது சேமிப்பிற்கு அதிக லாபம் அடைவார்கள்.
2 வருடங்கள்
ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு (ஊழியர் சேமலாப நிதியச் அமைப்பு) கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளில் தொழிலாளர்களின் சேமிப்பிற்கு 8.75 சதவீத வட்டி வழங்கியது. நடப்பு நிதி ஆண்டிலும் அதே வட்டி வருவாய் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
படம்: லைவ்மின்ட்
வட்டி வகிதம்
நிதி அமைச்சகம் மற்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் நிதியமைச்சக அதிகாரி ஒரு மத்திய அரசு சிறு சேமிப்பு மற்றும் பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிடும் இந்த நேரத்தில் ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு 8.75 சதவீத வட்டி விகிதத்தை மாற்றக்கூட்டாது எனக் கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் 9
ஆனால் இதற்கான முடிவுகளை ஈபிஎப்ஓ அமைப்பு வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தின் பின் நாடாளுமன்றத்தில் வட்டி விகித அளவுகளை வெளியிடும் எனத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
ரிசர்வ் வங்கி, செப்டம்பர் மாத இறுதியில், கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. அதேபோல் நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.25 சதவீதம் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
ஆனால் வங்கிகள் கடந்த ஒரு வருடத்தில் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.60 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளது.
புதிய கணக்கீட்டு முறை
இத்தகைய நிலையை மாற்றவே ரிசர்வ் வங்கிக் கடனுக்கான வட்டி விகித கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை அடுத்தச் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்
சிறு சேமிப்புத் திட்டங்களில் 8.7 சதவீதம் முதல் 9.3 சதவீதம் வரை வட்டி வருவாய் அளிக்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பின் பலன்களை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை என வங்கிகள் விளக்கம் அளிக்கிறது.
சேமிப்புத் தொகை
இந்நிலையில் பிஎஃப் கணக்கிற்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால் சேமிப்புத் தொகையின் அளவுகள் அதிகளவில் பாதிக்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த நிதியாண்டு வரை 8.75 சதவீத வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என ஈபிஎஃப்ஓ அமைப்பை நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.