டெல்லி: ஜப்பான் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவன தயாரிப்புகளின் அதீத உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் நாணய பரிமாற்றத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடு செய்ய இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த விலை உயர்வு குறித்த இறுதிக்கட்ட முடிவுகளை அடுத்தச் சில நாட்களில் மாடல்கள் வாரியாக அறிவிக்க உள்ளது.
பல வருடங்களாக விலை நிலையை உயர்த்தாமல் விற்பனை செய்து வந்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் கூட்டணி, உள்ளீடு செலவுகள், மின்சாரம், நாணய பரிமாற்றம் செலவுகள் அதிகரித்துள்ளதால் நிறுவன தயாரிப்புகளின் விலையை உயர்த்துவது கட்டாயமாகியுள்ளது என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் கூட்டணி நிறுவனத்தின் தலைவர் என்.ராஜா தெரிவித்தார்.
இந்தியாவில் இந்நிறுவனம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறிய ரகக் கார்கள் முதல் 1.29 கோடி ரூபாய் வரையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது.
ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் 2 சதவீதமும், பிஎம்டபிள்யூ 3 சதவீதமும் வரை விலை உயர்த்தவும் திட்டமிட்டுள்ள நிலையில் டொயோட்டா தற்போது விலை உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.