டெல்லி: நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய எல்லைக்குள் வரும் எதிரி நாட்டு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை 400 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டுபிடித்துத் தகர்த்து வீழ்த்தும் 5 ரஷ்ய எஸ்-400 டிரைம்ப் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த 5 ஏவுகணைகளின் மொத்த மதிப்பு 39,000 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோடி - புடின் சந்திப்பு
பாதுகாப்பு கையகப்படுத்தும் குழுவின் தலைவரான மனோகர் பாரிக்கர் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்புதல் பெற்றாலும், முறையான திட்டம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் சந்திப்பில் நடக்கும் எனத் தெரிகிறது.
அதற்கு முன் விலை பேரம் (வணிகப் பேச்சுவார்த்தைகள்) செய்யவே மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் - சீனா
இந்த 5 ஏவுகணைகளில் 3 பாகிஸ்தான் எல்லையிலும், 2 சீன எல்லை பகுதியிலும் நிறுவன இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
வான்வழி பாதுகாப்பு
இந்திய பாதுகாப்புத்துறை தரை மார்க்கமாக வரும் பாதிப்புகள் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தக்க வகையில் தயாராகி வரும் நிலையில் வான்வழித் தாக்குதல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை வாங்கி வருகிறது.
மேலும் இப்பாதுகாப்பு இந்தியாவில் உள்ள அணுஉலைகளையும் பாதுகாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த எஸ்-400 ரக ஏவுகணைகளுக்கு 2வது மிகப்பெரிய வாடிக்கையாளர் என்றால் அது இந்தியா தான்.
சீனா
இந்தியாவிற்கு எல்லை ஓரத்தில் அவ்வப்போது பிரச்சனைகளை அளித்து வரும் சீனாவிடம் 6 எஸ்-400 ஏவுகணைகளை வைத்துள்ளது. வருகிற 2017ஆம் ஆண்டு முதல் 6 எஸ்-400 பேட்டரிகள் டெலிவரி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள்
இந்தியா தனது கடற்படையை வலிமைப்படுத்த 1.5 பில்லியன் டாலர் குத்தகை திட்டத்தில் அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.
அதேபோல் அகுலா-II மற்றும் கிருஸ்டென்ட் ஐஎன்எஸ் சக்கரா ஆகிய இரு நீர்மூழ்கி கப்பல்களை 10 வருட ஒப்பந்த முறையில் வைத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா
இதுவரை இந்தியா ரஷ்யா உடன் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான 272 சுகோய் 30எம்கேஐ விமானங்களையும், 2.33 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா போர்க் கப்பலை பெற்றுள்ளது.