டெல்லி: மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயனுள்ள வகையில் அளிக்கப்பட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானிய தொகை பணக்காரர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் போய்ச் சேந்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், அரசின் மானிய உதவிகள் ஏழை மக்களுக்குச் சென்றடைவதுதான் நோக்கம். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாட்டு மக்களுக்குப் பொதுவாக வழங்கப்பட்ட மானியத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவு தொகை பணக்காரர்களும், வசதி படைத்தவர்களும் அனுபவித்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய மானியத்தைத் தொகை இழப்பைச் சிறந்த நிதி நிர்வாகத்தின் மூலம் கட்டுப்படுத்தி, செலவுகளைக் குறைத்து சரியான முறையில் ஏழைகளுக்கு வழங்க முடியும் என நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்த 1 லட்சம் கோடி ரூபாய் தொகை ரயில்வே, மின்சாரம், ஒரே ஒரு சிறு சேமிப்புத் திட்டம் மற்றும் பிபிஎப் திட்டத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு மூலம் ரூ. 40,151 கோடியும், மின்சாரம் மூலம் ரூ. 37,170 கோடியும், மண்ணெண்ணெய் மூலம் ரூ. 5,501 கோடியும், தங்கம் மூலம் ரூ. 4,093 கோடியும், ரயில்வே மூலம் ரூ. 3,671 கோடியும், விமான எரிபொருள் மூலம் ரூ. 762 கோடியும் சலுகையாக வசதி படைத்தவர்கள் பெறுகின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
பிபிஎப் மூலம் பெறும் வரிச் சலுகை ரூ. 11,900 கோடியாகும். இவை அனைத்தையும் சேர்த்தால் ரூ. 1,03,249 கோடி தொகையை வசதி படைத்தவர்கள் மானியமாக அரசிடமிருந்து பெறுகிறார்கள்.