மும்பை: நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாகத் திகழும் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் ஜெய்பிராகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 18.40 மல்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலையைச் சுமார் 16,500 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் ஆதித்தியா பிர்லா நிறுவனத்தின் சிமெண்ட் உற்பத்தியின் மொத்த அளவு வருடத்திற்கு 90.7 மில்லியன் டன்னாக உயர்ந்து உலகிலேயே மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
22.4 மில்லியன் டன் சிமெண்ட்
குமார் மங்களம் பிர்லா தலைமை வகிக்கும் அல்டரா டெக் நிறுவனம் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வருடத்திற்கு 22.4 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே ஜேபி நிறுவன தொழிற்சாலையைக் கைப்பற்றியுள்ளது.
புதிய சந்தைகள்
இதன் மூலம் அல்ட்ராடெக் நிறுவனம் சட்னா, கிழக்கு உத்திர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய சந்தையையும் வர்த்தகத்தையும் பெற உள்ளது.
கூடுதல் முதலீடு
அதுமட்டும் அல்லாமல் அல்ட்ரா டெக் நிறுவனம் தனது 4 மில்லியன் டன் கிரைன்டர் ஆலைகளை அமைக்கும் திட்டத்தில் கூடுதலாக 470 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மறுப்பு
ஏற்கனவே ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 5 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலை வாங்க அல்ட்ரா டெக் முயன்ற போது சுரங்கம் மற்றும் தாது வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் மறுப்புக் காரணமாக இந்த டீல்க்கு மும்பை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.
தனி நிறுவனம்
தற்போது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் தனது சுரங்கம் மற்றும் சிமெண்ட் உற்பத்தி வர்த்தகத்தைத் தனி நிறுவனமாகப் பிரிக்கப்படுவதன் மூலம் அல்ட்ராடெக் நிறுவனத்திற்குத் தனது தொழிற்சாலையை விற்பனை செய்கிறது.