பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான விஜய் மல்லையா (Vijay Mallya), முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் மீது வாங்கப்பட்ட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை தீர்க்க தனக்குக் கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
யுனைடெட் ஸ்பிரீட்ஸ்
இந்தியாவில் மதுபானம் தயாரிப்பிலும் மற்றும் வர்த்தகத்திலும் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகிக் கொண்டார் விஜய் மல்லையா.
தற்போது நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் டியாஜியோ நிறுவனம் மல்லையாவிற்கு 75 மில்லியன் டாலர் தொகையை அளிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
முறைகேடான பணப் பரிமாற்றம்
யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட டியாஜியோ நிறுவனத்தின் பணத்தை விஜய் மல்லையா தலைமையிலான நிர்வாகம், மல்லையா கட்டுப்பாட்டில் இருக்கும் பிற நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தது.
இதனால் விஜய் மல்லையா பல ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் இருந்த யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை உருவாகியது.
யுனைடெட் பீரிவரீஸ்
இந்நிலையில் தற்போது விஜய் மல்லையா கட்டுப்பாட்டில் இருக்கும் யுனைடெட் பீரிவரீஸ் நிறுவனத்திலும் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கடன் தொகை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனால் இப்பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழியான வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்க கடனை அடைக்க முடிவு செய்துள்ளார் விஜய் மல்லையா.
மூன்று முறை சந்திப்பு
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட 6,900 கோடி ரூபாய் கடனை ஒரே தவணையாக வங்கிகளுக்குச் செலுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் மூன்று முறையைப் பேச்சுவார்த்தை நடத்த மல்லையா முடிவு செய்துள்ளார்.
கடன் தொகை
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய அசல் தொகை 4,500-5,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கடனுக்கான வட்டி தொகை தோராயமாக 2,000 கோடி ரூபாய் எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.