டெல்லி: இந்திய காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு இத்துறையின் மீதான முதலீட்டுச் சட்டதிட்டங்களில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள படி இனி காப்பீட்டுத் துறையில் ஒரு நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை நேரடி அன்னிய முதலீட்டு வாயிலாக எந்த ஒரு அன்னிய நிறுவனமும் முதலீடு (ஆட்டோமேடிங் ரூட்) செய்ய முடியும். இதற்காக எந்தவிதமான முன் அனுமதியும் அரசிடம் பெறத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்திட்டங்களின் படி வெறும் 26 சதவீத மட்டுமே நேரடியாக முதலீடு செய்ய முடியும். ஆனால் 26 சதவீதம் முதல் 49 சதவீதம் வரையிலான முதலீட்டுக்கு மத்திய அரசின் (FIPB) அனுமதி தேவை.
இப்போது இந்த விதியில் மாற்றம் கொண்டுவந்து 49 சதவீதம் வரையில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியோடு முதலீட்டுச் சட்டதிட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் உயர்ந்து 2,944 கோடி டாலராக இருக்கிறது.
இந்தியாவில் சுமார் 52 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் 24 நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. 28 நிறுவனங்கள் ஜெனரல் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகிறது.