டெல்லி: வருமான வரி துறையினர் வங்கி வைப்பு நிதிகள் எனக் கூறப்படும் வங்கி டெபாசிட்களின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது. தனிநபர்கள் வருமான வரித் தாக்கலில் வங்கி டெபாசிட் மீது கிடைக்கும் வருமானத்தைக் கணக்குக் காட்டாமல் ஏமாற்றி வருவதாக இத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை உடனடியாகச் சரி செய்ய, வங்கி டெபாசிட் மீதான வருமானத்தைக் கணக்குக் காட்டாமல் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்த தனிநபர்கள் மீண்டும் உரியத் தகவல்களைக் குறிப்பிட்டு மீண்டு தாக்கல் செய்ய வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்
பொதுவாக வங்கி (தனியார் மற்றும் பொதுத் துறை) மற்றும் நிதி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள டெபாசிட் அளவுகள் குறித்த அனைத்து தவல்களும் ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்திற்குத் தெரியும்.
இதில் வைப்புச் செய்யப்பட்டுள்ள தொகை மற்றும் அதற்கான வட்டி வருமானம் குறித்த தகவல்களும் அடங்கும். இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் வருமான வரியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வைப்பு வருமானம் அளவு மற்றும் அரசின் கையில் உள்ள தகவல்களை ஒப்பிடுகையில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் வருமான வரித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை
தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வங்கி வைப்பு மூலம் கிடைத்த வருமானத்தை வருமான வரித் துறையினரிடம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில கருவுலங்கள் சமர்ப்பித்துள்ளது.
வரிப் படித்தம்
பார்ம் 26AS படிவத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வருமானத்தில் வரிப் படித்தம் குறித்த முழுமையான தகவல்கள் இருக்கும் இதனை வருமான வரித் துறையின் இணையதளத்தில் பெறலாம்.
10,000 ரூபாய் வரை வரி விலக்கு
தனிநபர் ஒருவர், ஒரு வருடத்திற்கு 10,000 ரூபாய் வரையிலான வங்கி வைப்பு நிதியின் வட்டி வருமானத்திற்கு விரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது.
பான் கார்டு
வங்கியிடம் தனிநபரின் பான் கார்டு தகவல்கள் இருக்கும் பட்சத்தில் வட்டி வருமானத்தில் வங்கி நிர்வாகமே 10 சதவீத தொகையைப் பிடித்துக்கொள்ளும்.
இல்லையெனில் வட்டி வருமானத்திற்கான டிடிஎஸ் வரி 20 சதவீதமாக வருமான வரித்துறை செலுத்த வேண்டியிருக்கும்.
முடிவு
எனவே தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 2013, 2014 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவத்தில் வைப்பு நிதிக்கான வட்டி வருமானத்தைக் குறிப்பிடத் தவறி இருந்தால் உடனடியாக வருமான வரி தாக்கல் படிவத்தை உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications