மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான டெக்ஸ்டைல் வர்த்தகத்தைச் செய்து வந்த அலோக் இண்டஸ்ட்ரீஸ் தற்போது வர்த்தகச் சரிவாலும், 20,000 வங்கிக் கடன் சுமையாலும் சிக்கித் தவித்து வருகிறது.
இக்கடனை வசூல் செய்ய இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான குழுவை அமைத்துத் தற்போது அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வர்த்தகக் கணக்குகளைச் சரிபார்த்தும், சொத்துக்களை மதிப்பீடும் செய்து வருகிறது.
இந்தக் கதையை நீங்க எங்கயோ கேட்டது போல இருக்கா.. வேற எங்கையும் இல்லை நம் விஜய் மல்லையா தான்.
மும்பையைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்னும் டெக்ஸ்டைல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் இணைந்து இந்திய வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் நூல் முதல் பாலியெஸ்டர் துணிகள் எனப் பல தரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்தியில் 26 சதவீத பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற சுமார் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தணிக்கை பணிகளுக்காகப் பணியாற்றி வந்த Deloitte நிறுவனம் திடீரென விலக்கிக்கொள்வதாகப் பங்குச்சந்தைக்கு அலோக் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது. நிதியாண்டின் மத்தியில் திடீரென ஒரு நிறுவனத்தில் இருந்து தணிக்கையாளர் வெளியேறுவது சந்தையில் சந்தேகமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்தேகம் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையாவை நினைவிற்குக் கொண்டு வந்தது. விஜய் மல்லையா பல ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறியது வங்கிகளுக்கு மிகப்பெரிய படிப்பினையைத் தந்துள்ளது. இதன் பின்னரே அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 20,000 கோடி ரூபாய் கடனை நினைவிற்குக் கொண்டு வந்தது வங்கிகள். இந்நிலையில் 20,000 ரூபாய் கடன் பெற்ற அலோக் இண்டஸ்ட்ரீஸ் மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகள் குழு, சோக்ஷி அண்ட் சோக்ஷி மற்றும் Grant Thornton நிறுவனங்களின் துணையுடன் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது. இச்சோதனையின் மூலம் அலோக் இண்டஸ்ட்ரீஸ் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தி இருந்தாலோ, அல்லது நிதி மோசடிகள் செய்யப்பட்டு இருந்தாலோ வெளிச்சத்திற்கு வந்து விடும் என எஸ்பிஐ தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குறித்து எவ்விதமான கேள்விகளுக்கு டெலாய்ட் பதில் அளிக்கவில்லை. ஆனால் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேந்தர் கூறுகையில் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து டெலாய்ட் வெளியேறியது முழுமையாக வியாபார நோக்கமாகவே தெரிகிறது. டெலாய்ட் நிறுவனம் அலோக் இண்டஸ்ட்ரீஸ் இல் இருந்து வெளியேறிய போது இந்திய பட்டய கணக்காளர்கள் நிலையத்தின் விதிமுறைகளின் படி இந்நிறுவனத்தின் தணிக்கை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ஷா குப்தா அண்ட் கோ என்னும் நிறுவனத்திற்கு no-objection சான்றிதழ் வழங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான குழு அலோக் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் மற்றும் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவில் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அலோக் இண்டஸ்ட்ரீஸ்
90 நாடுகளுக்கு ஏற்றுமதி
என்ன பிரச்சனை..?
சந்தேகம்
மல்லையா எபெக்ட்
எஸ்பிஐ தலைமையிலான குழு
சோதனை
டெலாய்ட்
ஷா குப்தா அண்ட் கோ
லண்டன்-க்கு எப்போ..?
பெரும் தலைகள்
ஊழல்..!