டெல்லி: பிஎப் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் (withdrawal) 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு மத்திய அரசு, வருமான வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்புதிய வரிச் சலுகை திட்டம் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக ஈபிஎப்ஒ அமைப்பு தெரிவித்துள்ளது.
50,000 ரூபாய்க்கு வரிச் சலுகை
அவசர நிதித் தேவைக்காக அல்லது வேலை இழந்தபின் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கப் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது வழக்கம்.
இப்படிப் பிஎப் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் 30,000 ரூபாய் வரையிலான தொகைக்கு மத்திய அரசு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஈபிஎப்ஓ அமைப்பின் வலியுறுத்தலின் படி மத்திய அரசு இதன் அளவை தற்போது 50,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நிதிச் சட்டம் 2016
நிதிச் சட்டம் 2016இன் படி, வருமான வரிச் சட்டம் 192A தொகுதியின் கீழ் மத்திய அரசு, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த 30,000 ரூபாய் என்ற அளவில் இருந்து தற்போது 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இனி பிஎப் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு முழுமையான வரிச் சலுகை கிடைக்கும்.
நீண்டகால முதலீடு
பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தைக் குறைந்த காலத்தில் கணக்காளர்கள் எடுக்கக் கூடாது என்பதை உணர்த்தியும், நீண்ட கால முதலீட்டை வலியுறுத்தியும் மத்திய அரசு 30,000 ரூபாய் தொகைக்கு மட்டும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு அதிகமான தொகைக்கு வருமான வரி வசூல் செய்து வந்தது.
வருமான வரி
தற்போதைய நிலைப்பாட்டின் படி 30,000 ரூபாய்க்கு அதிகமாக எடுக்கப்படும் தொகைக்கு மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தின் கீழ் சுமார் 10 சதவீத வரியை வசூல் செய்து வந்தது.
படிவங்கள்
இந்நிலையில் 15G அல்லது 15H படிவத்தை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தால் 30,000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கும் வரி விலக்குப் பெறலாம். படிவத்தைச் சமர்ப்பிக்கத் தவறினால் அதிகப்படியாகச் சுமார் 34.608 சதவீதம் அளவிலான வரியை மத்திய அரசு வசூல் செய்யும்.
வரி இல்லை
ஒரு பிஎப் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்குப் பிஎ பணத்தை மாற்றும்போதும், பிஎப் கணக்கு துவங்கி 5 வருடங்கள் ஆன நிலையில் பணத்தைத் திரும்பப் பெறும்போது ஆகிய தருணங்களில் வருமான வரி வசூல் செய்யப்படுவதில்லை.