டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 5 துணை வங்கிகளையும், நாட்டில் புதிதாகத் துவங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை முழுமையாக ஒன்றிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்த இணைப்பின் மூலம் தென் குமரி முனையில் இருந்து கஷ்மீர் வரையில் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் நிலையான மற்றும் மேம்படுத்தப்பட்ட வங்கி சேவை அளிக்க முடியும்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய தபால் துறைக்கு அடுத்தாக அதிகக் கிளைகளுடன் மக்களை நேரடியாக அணுகும் நிறுவனமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உயர உள்ளது.
கடந்த மே 17ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி மத்தியிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் இணைப்புக் குறித்து இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
ஒரு மாத காலமே ஆன நிலையில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, எஸ்பிஐ வங்கியின் வளர்ச்சி பாதைக்கு வித்திட்டுள்ளது.
உலகின் டாப் 50 வங்கிகளில் இதுவரை இந்திய வங்கிகள் எட்டிப்பார்க்காத நிலையில், தற்போது 550 பில்லியன் டாலர் (இணைப்பிற்குப் பின்) மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற உள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனாவின் ஐசிபிசி, இவ்வங்கியின் மொத்த மதிப்பு 3,452 பில்லியன் டாலர்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதெராபாத் (SBH), ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் (SBM), ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா (SBP), ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT) மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவையே எஸ்பிஐ(SBI) வங்கியுடன் இணையப்போகும் வங்கிகள்.