டெல்லி: கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கமும் உயர்ந்து மக்களின் பர்ஸை தொடர்ந்து பதம்பார்த்து வருகிறது.
உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து கண்காணிக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் மத்திய அரசின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் புதிய உத்தி வகுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை
இந்தியாவில் 24 மாதங்களில் இல்லாத அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, குறிப்பாகப் பருப்பு வகைகள், காய்கறிகளில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு
நாட்டு மக்களின் முக்கியத் தேவையான உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திடவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மத்திய அரசு புதிய வடிவத்தையும், வழிமுறையையும் வகுத்துள்ளது. இதன் மூலம் இனி வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலையைச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அருண் ஜேட்லி
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பருப்பு வகைகளின் விலையைக் குறைக்க நிதியமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், நாட்டில் பருப்பு விநியோகத்தை மேம்படுத்தவும், கூடுதல் சேமிப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனைச் செய்யப் பல்வேறு நாடுகளில் இருந்து பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி
உடனடி தேவைக்காக மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மியான்மார் நாட்டில் இருந்து மத்திய அரசு மூலம் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய ஏற்கனவே ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பற்றாக்குறை
நிதியமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் தற்போது 7.6 மில்லியன் டன் அளவிலான பருப்பு வகைகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் 1.5 லட்சம் உபரி இருப்பைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.