டெல்லி: இந்தியாவில் மொபைல் சேவை மற்றும் மொபைல் டேட்டா சேவை வழங்குவதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்படும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்த இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்குத் தோராயமாக 5.66 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விலைமதிப்பில் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலமாக இதைப் பார்க்கப்படுகிறது.
இந்த ஏலம் அடுத்த 2 மாதத்தில் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நடப்பு நிதியாண்டில் தனது சேவையை முழுமையாக மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிறுவன சேவை அறிமுகம் நாட்டில் மிகப்பெரிய அளவிலான புரட்சியை உருவாக்கும் என அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூட அதை ஒப்புக்கொண்டார்.
முன்னணி நிறுவனங்கள்
இதன் காரணமாக ஜியோ உடன் சந்தையில் போட்டி போடும் வகையில், ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான தொகையை ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இதனுடன் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தை முழுமையாக வாங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்துடன் வாடிக்கையாளர் மட்டத்தில் சரிசமமாகப் போட்டி போட முடியும்.
இது ஏர்டெல் நிறுவனத்திற்குச் சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை அளிக்கும். இதில் இருந்து தப்புவதற்காகவே ஏர்டெல் அதிகளவிலான அலைக்கற்றை ஏலத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆதிக்கம்
இந்நிலையில் ஆகஸ்ட் மாத கடைசியில் நடக்கவிருக்கும் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,142 மெகாஹெட்ஸ்
இந்த ஏலத்தில் 700MHz, 800MHz, 900MHz, 1800MHz, 2100MHz, 2300MHz மற்றும் 2500MHz பேன்டுகளில் மொத்தம் 2,142 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட உள்ளது.
விலை
அடுத்த 2 மாதத்தில் நடக்க இருக்கும் இந்த ஏலத்தில் 700 மெகாஹெட்ஸ் பேன்டில் ஒரு மெகாஹெட்ஸ்-க்கு 11,500 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 700 மெகாஹெட்ஸ் பேன்டிக்கு 2,873 கோடி ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை நடக்கும் ஏலத்தில் 700 மெகாஹெட்ஸ் பேன்ட்தான் அதிக விலைமதிப்புடையதாக உள்ளது.
பிற பேன்ட்கள்
900 மெகாஹெட்ஸ் பேன்ட்- 3,341 கோடி ரூபாய்
800 மெகாஹெட்ஸ் பேன்ட்- 5,819 கோடி ரூபாய்
2100 மெகாஹெட்ஸ் பேன்ட்- 3,746 கோடி ரூபாய்
2300 மெகாஹெட்ஸ் பேன்ட்- 817 கோடி ரூபாய் என்ற நிலையில் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலம்
மேலும் மத்திய அரசு இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏலம் விடப்படும் அலைக்கற்றையின் வைத்திருப்புக் காலத்தை 3 வருடத்தில் 1 வருடமாகக் குறைத்துள்ளது. இதனால் நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரிக்கும். மேலும் அனைத்து நிறுவனங்களும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான சேவை அளித்திட இக்காலக் குறைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5.66 லட்சம் கோடி
மத்திய அரசு மற்றும் டிராய் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த ஏலத்தில் சுமார் 5.66 லட்சம் கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.