இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை வழங்கி வந்த விஸ்தாரா நிறுவனம், மத்திய விமானப் போக்கவரத்து துறையின் புதிய மாற்றங்கள் மூலம் முதல் முறையாகக் கடல் தாண்டி பயணம் செய்ய உள்ளது.
டெல்லி, மும்பை, கோவா, சென்னை, பெங்களுரூ எனப் பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வந்த விஸ்தாரா நிறுவனம் தற்போது அயல்நாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளது. இதன் படி தென் ஆசிய பகுதிக்கு பறக்கத் திட்டமிட்டுள்ளது.
விஸ்தாரா
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த விஸ்தாரா இதுநாள் வரை உள்நாட்டு விமானச் சேவை மட்டுமே அளித்து வந்தது. அதுவும் பயணிகள் சேவை மட்டும், சரக்குப் போக்குவரத்தில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5/20 விதி நீக்கம்
இந்தியாவில் ஏந்தொரு விமான நிறுவனமாக இருந்தாலும் சரி 5 வருடம் உள்ளாட்டு விமானச் சேவை அளித்த பின்பே வெளிநாடுகளுக்கு விமானச் சேவை அளிக்க அனுமதிக்கப்படும். இதனுடன் இந்த 5 வருடத்திற்குள் சுமார் 20 விமானங்களைச் சேவையில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
தளர்வு
இப்புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மாற்றத்தில் 20 விமானங்களை உள்நாட்டுச் சேவையைப் பயன்படுத்தி இருந்தாலே போதும் வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கத் துவங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 வருடம் சேவை அளித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
லாபம்..
இந்த 5/20 விதி மாற்றத்தால் இந்தியா சந்தையில் புதிதாக இறங்கியுள்ள விஸ்தாரா மற்றும் ஏர்ஏசியா உள்நாட்டில் 20 விமானங்களைச் சேவையில் உட்படுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கலாம்.
புதிய விமானங்கள்
மத்திய அரசின் தளர்வுகளை அடுத்து விஸ்தாரா தற்போது புதிய விமானங்களை ஆர்டர் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவைத் தாண்டி பறக்க விஸ்தாரா தயாராகி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான சஞ்சிவ் கபூர் தெரிவித்தார்.
முதல் பயணம்
விஸ்தாராவின் முதல் அயல்நாட்டுப் பயணத்தில் நேரம் 3 மணிநேரத்தில் இருந்து 3.30 மணிநேரம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இப்பயணம் தற்போது வர்த்தகத்தில் உள்ள ஏ320 ரக விமானத்தில் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தற்போதைய நிலையில் இதன் இலக்கு தென் ஆசியா மற்றும் சார்க் நாடுகள் தான்.
2018ஆம் ஆண்டு
தற்போது இந்நிறுவனம் 11 ஏ320 விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது, 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 13ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையான அயல்நாட்டுச் சேவையில் விஸ்தாரா இறங்கும் என உறுதியளித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கொள்கை
இந்தியாவில் விமானப் போக்குவரத்து புதிய உச்சத்தை அடைந்து வரும் இத்தகைய தருணத்தில், நடைமுறைக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி அமைப்பதே உத்தமம்.
இந்நிலையில் 10 வருடத்திற்கு மேலாக எவ்விதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இருக்கும் விமானப் போக்குவரத்துக் கொள்கையில் மத்திய அரசு மாற்றியுள்ளது இத்துறை வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாக அமையும்.