டெல்லி: தலைநகரமான டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனைத் தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் 10 வருட பழமையான டீசல் கார்களை, இனி டெல்லி சாலையில் ஓடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இது கடந்த முறை போல் கண்துடைப்பு விஷயமாக இல்லாமல் உடனடியாகவும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைப்பின் தலைவரான நீதிபதி ஷ்வன்டர் குமார் இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என டெல்லி ஆர்டிஓ அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவில் டெல்லியில் 10 வருட பழைய டீசல் கார்கள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் சமர்ப்பிக்கும் படியும் இத்தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
Odd-Even திட்டம்
இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இதற்குத் துவக்கமாக டெல்லி அரசு Odd-Even என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இது மக்கள் மத்தியில் இருவேற்றுப்பட்ட கருத்துக்களை அளித்தது.
இதனை மையமாகக் கொண்டு பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
10 வருட பழைய கார்கள்
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முதல் படியாகத் தலைநகர் டெல்லியில் இயற்கை காற்றை அதிகளவில் மாசுபடுத்தும் 10 வருட பழைய டீசல் கார்களின் பயன்பாட்டைத் தடுக்க இதனைச் சாலையில் ஓட்டத் தடை விதித்துள்ளது.
இரவோடு இரவாக
இத்தகைய கார்களின் பயன்பாட்டைத் தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 2015ஆம் ஆண்டு உத்தரவு அளித்தது. இதுநாள் வரை இந்த உத்தரவின் பெயரில் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த ஆணைக் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக உத்தரவு கடுமையாக்கப்பட்டதால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பில் உள்ளனர்.
கார் விற்பனை
இச்சட்டம் கடுமையாக்கப்பட்டு 10 வருடப் பழைய கார்களின் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்யப்பட்டால், டெல்லியில் அடுத்தச் சில மாதங்களில் கார் விற்பனை இமாலய உச்சத்தை அடையும்.
அதேபோல் வங்கிகளில் ஆட்டோ லோன் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இத்திட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. காரணம் நாட்டில் காற்று மாசுபாட்டு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து காணப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அபராதம்
மேலும் ஏப்ரல் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுக்குப் பின் டெல்லி போலீஸ் மோட்டார் விதிச்சட்டத்தின் கீழ் 10 வருட பழைய டீசல் கார்களைப் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்தது.
இச்சட்டம் இந்தியா முழுவதும் அடுத்தச் சில வருடங்களில் அமலாக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் புதிய திட்டம்
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை இந்திய சுற்றுச்சூழலை பாதிக்கும் 12 வருடப் பழைய கார்களின் பயன்பாட்டைக் குறைக்கத் தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் கொள்கை என்ற புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.
80 சதவீத மாசுபாடு
இப்புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவில் சுமார் 80 சதவீத மாசுப்பட்டை குறைக்கப்படும், அதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சுமார் 30 சதவீதம் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
15 சதவீத சலுகை
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை வடிவமைத்த இத்திட்டத்தின் படி, ஒரு தனிநபர் இரண்டாம் தர (pre-Bharat stage II vehicle) வாகனங்கள் அல்லது 12 வருடப் பழைய நான்கு சக்கர வாகனங்களை scrapping எனப்படும் கழிவு கிடங்குகளில் போட்டுவிட்டால் புதிய கார்களைப் பெறும் போது 15 சதவீதம் அளவிலான சலுகையை அளிக்கப்படுகிறது.
இச்சலுகையில் உற்பத்தி சலுகை மற்றும் கலால் வரி திரும்புதலும் அடங்கும். இத்திடத்தின் கீழ் பயணிகள் வாகனம் மட்டும் அல்லாலமல் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.
கழிவு கிடங்கு
கார் அல்லது வர்த்தக வாகனங்களான சரக்கு ஊர்தி ஆகியவற்றைக் கழிவு கிடங்குகளில் போடும்போது, கழிவு கிடங்குகள் அதற்கான சான்றிதழ் வழங்கும். இந்தச் சான்றிதழை வைத்துக்கொண்டு புதிய கார் அல்லது வாகனங்களை வாங்கும்போது 15 சதவீத சலுகையைப் பெறலாம்.
அரசு அனுமதி
மேலும் குறிப்பிட்ட கழிவு கிடங்குகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்படும். இதன் பின் அரசு அனுமதி பெற்ற கிடங்குகளில் வாகனங்களைப் போட்டுவிட்டு அதற்கான சான்றிதழ் பெறலாம் எனச் சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட திட்டம்
இத்திட்டத்தின் விரிவாக்கமாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை இதேபோன்ற சலுகையை இரு சக்கர வாகனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா
நம் நாட்டில் இரண்டாம் தர வாகனங்கள் என்று அழைக்கப்படும் 12 வருடப் பழைய நான்கு சக்கர வாகனங்கள் 40 லட்சத்திற்கு அதிகமான எண்ணிக்கையிலும், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
கலால் வரி
இப்புதிய திட்டத்தின் மூலம் மக்கள் புதிய வாகனங்களை வாங்கும் போது கலால் வரியாகச் செலுத்தப்படும் தொகையில் 60 சதவீதத்தைத் திருப்பிச் செலுத்த சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை நிதியமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கூடிய விரைவில் இத்திட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது.