டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் டெலிகாம் வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் கால் டிராப் பிரச்சனை, மோசமான சேவை என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வகைகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்டரம் ஏலமா.. அப்படி இதுல என்ன இருக்கு..?
செப்டம்பர் 29
மத்திய அரசும், டெலிகாம் துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் நாட்டின் டெலிகாம் சேவையை அடுத்தப் படிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஏலத்தில் மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.6 லட்சம் கோடி..
அடுத்த மாதம் இறுதியில் நடக்க உள்ள ஏலத்தில் சுமார் 2,355 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் ஏலம் விடப்படுகிறது.
மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஏல விலையின் படி இந்த ஏலத்தில் 5.6 லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெறப்பட உள்ளது. மேலும் இந்த ஏலத்திற்காக அழைப்பு விண்ணப்பங்களை நாட்டின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் அனுப்பட்டுள்ளது என டெலிகாம் துறை செயலாளர் ஜே.எஸ்.தீபக் தெரிவித்தார்.
மார்ச் 2015
2015ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய அரசு 1.1 லட்சம் ரூபாய் வருமானத்தைப் பெற்று இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகையாக வரலாற்றில் பதிவானது.
இந்நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள ஏல வருமான கணிப்புகள் 5மடங்கு அதிகமாகும்.
குற்றச்சாட்டு
தற்போது நடக்க உள்ள ஏலத்தில் மத்திய அரசு முதன்முதலாக 700மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. ஆனால் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை மிகவும் அதிகம் எனப் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய அரசு பதில்
சந்தையில் உள்ள போட்டி மற்றும் இந்த அலைக்கற்றை மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு இப்பிரிவில் இருக்கும் ஒரு மெகாஹெட்ஸ் அலைக்கற்றைக்கு 11,500 கோடி ரூபாய் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்துத் தீபக் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையில் தங்கத்தைப் போன்றது 700மெகாஹெட்ஸ் அலைக்கற்றை, இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளித்து அதிகளவிலான வருமானத்தைப் பெற கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் விலை நிர்ணயம் மிகவும் சரியானதே என்று கூறினார்.
3 லட்சம் கோடி
தற்போது இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் செயல்படுகிறது. தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையை விரிவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் அதிக முதலீடு செய்து வருவதால் கடனை அளவைக் குறைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
கட்டணம்
கடந்த முறை செய்யப்பட்ட ஏலத்தில், 5 சதவீதமாக இருந்த ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விரைவான நடவடிக்கை
இதுமட்டும் அல்லாமல் ஏலத்தில் வெற்றிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்குள் அலைக்கற்றை அளிக்கப்படும். முன்பெல்லாம் இதற்கு 3 மாதம் முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.
லாக்-இன் காலம்
மேலும் ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைப் பயன்படுத்தும் காலம் 3 வருடத்தில் இருந்து 1 வருடமாகக் குறைக்கப்பட்டு, செப்டம்பர் 29ஆம் தேதி நடக்க இருக்கும் ஏலம் முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications