பெங்களுரூ: உலகிலேயே குறைவான கட்டணத்தில் இண்டர்நெட் டேட்டா மற்றும் டெலிகாம் சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் வழங்குகிறது என இந்நிறுவனம் மார்த்தட்டிக்கொண்டு வருகிறது.
இதை மக்களும் ஒப்புக்கொண்டனர். காரணம் இந்தியாவில் இத்தகையைக் குறைவான கட்டணத்தில் யாரும் டெலிகாம் சேவை அளிப்பதில் என்பதனாலே.
ஆனால் இந்தியாவில் தற்போது இருக்கும் டேட்டா மற்றும் டெலிகாம் சேவை கட்டணத்தை 75 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என முக்கிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவும்.. உலக நாடுகளும்..
எப்போதும் இந்தியாவை வளரும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு நாட்டின் வளர்ச்சி, பணவீக்கம், விலைவாசி குறித்த ஆய்வுகள் நடத்தப்படும்.
ஆனால் டெலிகாம் துறை குறித்த இந்த ஆய்வில், நாடுகள் மத்தியிலான ஒப்பீட்டைத் தாண்டி மக்கள் தொகையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆய்வின் தரவுகள் மிகவும் நம்பகமாக உள்ளது.
டேட்டா கட்டணம்
இந்தியாவில் தற்போது 1 ஜிபி இன்டர்நெட் டேட்டா 228 ரூபாயில் உள்ளது. இந்த விலை நிலையை வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 228 ரூபாய் என்பது மிகவும் அதிகம் எனப் பன்னாட்டு டெலிகாம் துறை சார்ந்த ஆய்வு நிறுவனமான Analysys Mason தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரம்
இந்தியாவில் இருக்கும் 1 ஜிபி டேட்டா கட்டணம் நாட்டின் தனிமனித மக்களின் வருமானத்தை ஒப்பிடுகையில் 2.6 சதவீதம். பிற வளரும், வளர்ந்த நாடுகளில் இதன் அளவு 0.4-0.5 சதவீதமாக உள்ளது என்று Analysys Mason நிறுவனம் புள்ளிவிபரத்தை புட்டுபுட்டு வைத்துள்ளது.
இது தான் மேட்டர்.
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் இந்தியாவில் ஒருவர் தனது மாத சம்பளத்தில் 1 ஜிபி இண்டர்நெட் டேட்டாவிற்காக 2.6 சதவீத பணத்தைச் செலவு செய்கிறான்
பிற நாடுகளில் இதன் அளவு வெறும் 0.4-0.5 சதவீதமாக உள்ளது. இது தான் சங்கதி.
வாடிக்கையாளர்
உலக நாடுகளுக்கு இணையாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களது டேட்டா மற்றும் டெலிகாம் சேவை கட்டணத்தைத் தற்போது இருக்கும் அளவுகளை விட 75 சதவீதம் குறைத்தால் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 66.7 கோடியாக உயரும்.
அதுமட்டும் அல்லாமல் 2019-20ஆம் ஆண்டுக்குள் தனிநபரின் இன்டர்நெட் பயன்பாட்டு அளவு 4.2-4.3 ஜிபி வரையில் உயரும் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
முக்கியமான பாயின்ட்
Analysys Mason ஆய்வறிக்கையில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இதுதான், டெலிகாம் நிறுவனங்கள் உலக நாடுகளுக்கு இணையான அளவில் கட்டணத்தைக் குறைத்தால் கண்டிப்பாக நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாது என்பதே.
எப்படி..?
டெலிகாம் சேவை கட்டணத்தை 1ஜிபிக்கு 52 ரூபாய் என்று குறைப்பதன் மூலம் ஒரு வாடிக்கையாளரின் இன்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவு 10.2 சதவீதமாக உயரும். இதனுடன் 10 சதவீத வாய்ஸ் கால் வருமானம் சேரும்.
ஆகமொத்தம் சராசரியாக ஒரு வாடிக்காயாளர் மாதத்திற்கு 645 ரூபாய் வருமானத்தை நிறுவனங்களுக்கு அளிக்கும். இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை.
விலைப்போர்
21 பில்லியன் டாலர் முதலீட்டுடன் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ குதித்துள்ளதை அடுத்து இந்தியாவில் புதிய விலைப்போர் ஒன்று உருவாகியுள்ளது.
இந்தப் போட்டியால் வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜி மற்றும் 4ஜி
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேகமாக 3ஜி மற்றும் 4ஜி சேவை மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் இந்தி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.
ஆனால் எந்த நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ளது எனத் தெரிவிக்கவில்லை.