சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழகத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.
இருப்புச் சிறகுகள் கொண்ட பறவை இறந்துவிட்டது எனப் பிரிட்டன் நாளிதழான டெலிகிராப், தனது இந்திய பதிப்பு வெளியீட்டில் முதல் பக்கத்தில் செய்தியை வெளியிட்டு தனது சோகத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தது.
இத்தகைய சக்திவாய்ந்த பெண் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவை கர்நாடகா கருவூலத்தில் தற்போது முடங்கிக் கிடக்கிறது.
சுப்ரமணியன் சுவாமி
வருமான வரி அறிக்கையை வைத்து ஜனதா கட்சியின் அப்போதைய தலைவரான சுப்ரமணியன் சுவாமி மறைந்த தமிழக முதலமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்தார்.
இதன் பெயரில் வருமான வரித்துறையின் சோதனையைத் துவங்கியது.
வருமான வரித்துறையின் சோதனை
சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் மீது 1996ஆம் ஆண்டுச் சென்னையில் இருக்கும் ஜெ. வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை செய்தனர்.
இச்சோதனையில் வருமானத்திற்குக் கணக்கு வராத 750 ஜோடி செப்புகள், 10,000த்திற்கு அதிகமான புடவைகள் மட்டுமின்றி 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 44 குளிர்சாதனப் பெட்டி மற்றும் 91 கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டது.
வளர்ப்பு மகனின் ஆடம்பர் திருமணம்
1995ஆம் ஆண்டு ஜெ. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கவைக்கும் அளவிற்குத் தனது வளர்ப்பு மகனான சுதாகரன் திருமணம் சென்னையில் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.
இக்காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தான் இனி வருடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறப்போவதாகக் கூறினார்.
இதன் அடிப்படையிலேயே வருமான வரி அறிக்கையும் தாக்கல் செய்தார்.
தோல்வியும்.. வழக்கும்.
இதன் பின் 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை இழந்தார் ஜெ., ஒரு வருட காலத்திற்குப் பின் இந்திய வருமான வரித்துறைக்குச் சமர்ப்பித்த அறிக்கையை மையமாகக் கொண்டு ஜனதா கட்சியின் தலைவரான சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடுத்தார்.
இந்த வழக்கிற்காக ஒரு மாத சிறைவாசமும் இருந்தார் ஜெயலலிதா, அதன் பின் 2014ஆம் இவ்வழக்கின் விசாரணையில் கர்நாடக நீதிமன்றத்தின் இவர் மீதான குற்றம் நிருபணம் ஆனது.
ஏப்ரல் 2015
இந்நிலையில் ஏப்ரல் 2015ஆம் ஆண்டுச் சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையில் ஜெ. அவர்கள் தனக்குச் சொந்தமான 21.28 கிலோ தங்கம் கர்நாடக கருவூலத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
2004 வரை...
ஜெ. மீது தொடுக்கப்பட்ட இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு 2002ஆம் ஆண்டுக் கர்நாடக உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2004 வரை மேலே குறிப்பிட்ட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துச் சொத்துக்களும் தமிழ்நாடு கருவூலத்தில் இருந்தது என இவ்வழக்கிற்கு எதிராக வாதம் செய்த பிவி ஆச்சார்யா தெரிவித்தார்.
முடிவு தான் என்ன..?
தற்போது கர்நாடக கருவூலத்தில் இருக்கும் ஜெ.விற்குச் சொந்தமாகக் கூறப்படும் அனைத்துச் சொத்துக்களும் அவரது வருமானத்திற்கு அதிக மதிப்புடையதாக உள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனப் பிவி ஆச்சார்யா தெரிவித்தார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.
தீர்ப்புகள்
இந்த வழக்கின் விசாரணையில் பெங்களுரூ சிறப்பு நீதிமன்றம் ஜெ. மற்றும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா நடராஜன், சுதாகரன் ஆகியோர் மீதான குற்றத்தை உறுதி செய்து 2014ஆம் தண்டனை வழங்கிய நிலையில் 2015ஆம் ஆண்டுக் கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
தற்போது இவ்வழக்கின் மீது இருக்கும் இரு தீர்ப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
ஜெயலலிதாவிற்குச் சொந்தமான பணத்தில் சேர்க்கப்பட்ட சொத்துக்களுக்குப் பினாமியாகச் செயல்பட்ட சசிகலா நடராஜன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.