டெல்லி: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் போது பரிவர்த்தனை வரி விதிக்கலாம் என்றும் ஸ்மார்ட் போன் வாங்க 1000 ரூபாய் மானியம் அளிக்கலாம் என்றும் முதலமைச்சர்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ளது.
2005-ம் ஆண்டுக் காங்கிரஸ் அரசும் இதே போன்ற ஒரு முடிவை எடுத்த போது கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.
சந்திரபாபு நாயுடு கருத்து
இது குறித்த கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்ட போது காங்கிரஸ் இதனை நடைமுறைப்படுத்த முயன்ற போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இன்றைய அளவிற்குப் பயன்பாட்டில் இல்லை என்றும், இப்போது இருக்கும் சூழல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்றச் சூழலாக இருப்பதால் இது சாத்தியப்படும் என்றும் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் மானியம்
மேலும் இந்த முதலமைச்சர்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ள அறிக்கையில், ஸ்மார்ட்போன் வாங்க 1000 ரூபாய் வரை மானியம் அளிக்கலாம் என்றும் இந்த மானியத்தைக் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் வணிகர் தள்ளுபடி விகிதம் ஏதும் இல்லாமல் அளிக்கலாம் என்றும் மானியம் பெற சில வரம்புகள் விதிக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆதார்
இடைக்கால அறிக்கையில் அரசு ஏஜென்சிகள் அனைத்தும் உடனடியாக ஆதார் அட்டை மூலம் பரிவத்தனை செய்யக்கூடியவையாக உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக வணிகர்களுக்குப் பயோமெட்ரிக் சாதனங்களை 50 சதவீத சலுகை விலையில் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
சலுகைகள்
வணிகர்களும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையைச் செய்ய வருமான வரியில் சில விலக்குகள் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
செலவு குறையும், பாதுகாப்பானது
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதன் மூலம் பணம் அச்சடிக்கும் செலவு குறையும் என்றும், பாதுகாப்பானது என்றும், திருட்டுப் பயம் குறையும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது அனைத்தும் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் தங்களது பரிந்துரைகளும் இடம் பெறும் என்று நம்புவதாக நாயுடு தெரிவித்தார்.
பணம் செலுத்தும் மையங்கள்
மேலும் இந்த முதல்வர்கள் குழு இந்தியாவில் பணம் செலுத்துவதற்கான மையங்கள் அதிகம் திறக்கப்பட வேண்டும் என்றும் இதற்காகச் சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ நாடுகளில் உள்ள பணம் செலுத்தும் மையங்கள் குறித்தும் எடுத்துக்காட்டுகளை முன்வைத்துள்ளனர்.
2000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்
இதே போன்று அன்மையில் 2000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க முடியுமா என்று மத்திய அரசு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர்கள் குழுவில் உள்ளவர்கள்
சந்திரபாபு நாயுடு மட்டும் இல்லாமல் ஒடிசாவில் இருந்து நவீன் பட்நாயக், மகாராஷ்டிர தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய பிரதேச மாநிலம் சிவராஜ் சிங் சவுகான், பி.கே. சாம்லிங் சிக்கிம், புதுச்சேரி நாராயணசாமி, நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் அரவிந்த் பணகரியா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோரும் இந்தச் செல்லா ரூபாய் நோட்டுகளுக்கான முதல்வர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எது முக்கியம்..?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் வளர்ச்சி தொய்ந்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வர்த்தக சந்தைக்கு தேவையான வரி சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்தாமல் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் மத்திய அரசு கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்தியா தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு மானியம் அவசியமா..?
விவசாய துறை
ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு அளிக்கப்படும் மானியத்தை விவசாயிகளுக்கு அளித்தால் நாட்டின் உணவு உற்பத்தி அதிகரித்து உணவு பணவீக்கம் குறையும், இல்லை என்றால் பெட்ரோலுக்கு மாணியம் அளித்தால் கூட நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்.
டிஜிட்டல் இந்தியா
மத்திய அரசு ஸ்மார்ட்போன் மானியத்தை அளிப்பதன் வாயிலாக அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் டிஜிட்டல் பண பரிமாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும், வங்கிகள் பரிமாற்ற கட்டணம், சேவைக் கட்டணம், பயன்பாட்டு கட்டணம் என ஒவ்வொரு முறையும் பிடித்துக்கொள்கிறது.
அடிப்படையில் இதனை முழுமையாக தள்ளுபடி செய்தாலே இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் மக்களிடம் சென்றடையும். மத்திய அரசு வங்கிகளுக்கு இதனை நீக்க உத்தரவிடலாம்.
மறைமுக பலன்
மேலும் ஸ்மார்ட்போனுக்கான 1000 ரூபாய் மானியம் 4ஜி போனுக்கு மட்டும் என்பதால், பிரதமர் மோடி ஆதரவு பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
ஜியோவின் அறிமுக விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது இன்று வரை வர்த்தக சந்தையில் கேள்வியாகவே உள்ளது.
மக்கள் கருத்து
நீங்களே சொல்லுங்க மக்களே, இப்போதைய சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு மாணியம் அவசியமா..?