டெல்லி: இந்தியாவில் பணமதிப்பிழப்புக்குப் பின் வெளியாகும் முதல் பட்ஜெட் அறிக்கை என்பதால், மத்திய பட்ஜெட் 2017-18 அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், அதனைத் தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை, வேலைவாய்ப்புகள், வரி விதிப்புகள் ஆகியவை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியத்துவம் பெறும்.
நாடாளுமன்றத்தில் 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது.
கடினம்
எப்போதும் இல்லாத அளவிற்கு 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகப் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி அல்லது தனிநபர் நலத் திட்டங்கள் மையமாக வைத்து நிதியமைச்சர் பட்ஜெட் அறிக்கையைத் திட்டமிடுவார்.
ஆனால் இப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுடன் சேர்ந்து தனிநபர் நல திட்டங்களையும் சிறப்பாக அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளார்.
சரி, 2017-18ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் சாமானியர்கள் முதல் வர்த்தகச் சந்தை, தொழிற்துறை என அனைத்துத் தரப்பினரும் கவனிக்க வேண்டியவற்றை இப்போது பார்ப்போம்.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசு எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவும் தடாலடியாத 500 மற்றும் 1000 ரூபாய்களைச் செல்லாது என அறிவித்தது இதனால் மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகச் சந்தையே ஆடிப்போனது. இந்த நடவடிக்கையின் மூலம் பல வர்த்தகத் துறைகள் சரிவைச் சந்தித்தது.
இந்நிலையில் தற்போது பணமதிப்பிழப்புப் பிரச்சனைகளில் மக்கள் வெளிவந்த நிலையில், மத்திய அரசு பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல வரி சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் அதிகப் பணத்தை வித்டிரா செய்வோருக்குக் கூடுதல் கட்டணத்தையும் விதிக்க முடிவு செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி
2017 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலங்களுக்குடன் சில சிக்கல்களை மத்திய அரசு சந்தித்ததால் இதன் அமலாக்கம் தள்ளிப்போனது. மேலும் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்து உறுதியான முடிவு மற்றும் நாள் போன்ற முக்கியத் தகவல்களைப் பட்ஜெட் 2017-18இல் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டால் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எவ்விதமான தடையும் இன்றி இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்ய முடியும்.
இதன் மூலம் இந்திய நாட்டின் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் மிகப்பெரிய புரட்சி ஏற்படுவது உறுதி.
வருமான வரி
மறைமுக வரியை ஜிஎஸ்டி மூலம் புதுமைப்படுத்திய மத்திய அரசு, நேரடி வரி விதிப்பிலும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வருமான வரி விதிப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவும் அதற்கான சாதகமான வாய்ப்புகளை நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆராய்ந்து வருகிறார்.
மேலும் 80சி கீழ், வைப்பு கணக்கு, காப்பீடு, மியூச்சுவல் பண்டு ஆகியவற்றின் கீழ் வரிச் சலுகை பெறும் அளவான 1.5 லட்சம் ரூபாய் அளவீடுகளை 2 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்பரேட் வரி
மத்திய அரசு 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், கார்பரேட் வரி அளவீடுகளை 1.25-1.5 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதில் முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்படும் எனவும் தெரிகிறது.
ரயில்வே
90 வருடங்களுக்குப் பின் மத்திய அரசு மத்திய பட்ஜெட் அறிக்கையுடன், ரயில்வே பட்ஜெட் அறிக்கையும் இணைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனி நிதி செலவுகளைக் குறைக்க முடியும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு இந்திய ரயில்வே துறைக்குச் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய வருவாய் ஈட்டும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் குறைந்தது 6 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரும் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
விவசாயம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யப் பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். அதேபோல இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாயக் கடனுக்கான 60 நாள் வட்டியைத் தள்ளுபடி செய்யுள்ள நிலையில், விவசாயத் துறைக்கான புதிய சில அறிவிப்புகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறைக்குப் பல வரிச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சீனா நாட்டின் முறையைப் பின்பற்றும் வகையில் ஒரு நகரத்தில் உற்பத்தி பரிவுகள், மக்கள் தேவைகள், வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை அமைக்கும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு 2017-18 பட்ஜெட் அறிக்கையில் புதிதாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடு
இந்திய நாட்டின் தொழிற்துறை மற்றும் தொழிநுட்பம் வளர்ச்சி அடைய நிதி தேவை அதிகமாக உள்ள நிலையில், அன்னிய முதலீடு, வென்சர் கேப்பிடல், தனியார் பங்கு முதலீட்டின் வாயிலாக இந்தியாவில் முதலீட்டைக் கொண்டு வரும் நோக்கில் இத்தகை நிறுவனங்களுக்கு முதலீடுகளும் தனிப்பட்ட சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்டார்ட்அப்
மத்திய பட்ஜெட் 2017 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
ஏற்கனவே இந்தியாவில் துவங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு முதல் 3 வருடம் முழுமையான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதனை 5 வருடமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தில் முக்கியச் சில அறிவிப்புகளையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வழங்க முடிவு செய்துள்ளார்.