டெல்லியில் உள்ள ஒரு சோனி எரிக்சன் விற்பனை மையத்தின் வாசலில் ஒரு மேஜையில் வைத்துத் தொடங்கப்பட்ட மறு சீரமைக்கப்பட்ட ஃபோன்களை விற்பனை செய்யும் சிறிய கடை, தொடங்கப்பட்ட எட்டே வருடங்களில் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
"நாங்கள் ஒரு மேஜையில் இந்தத் தொழிலை தொடங்கினோம். நாங்கள் விற்பனையை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பெரிய கூடம் கூடிவிட்டது. நாங்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை உதவியை நாட வேண்டியதாகப் போனது" என்று தான் மறு சீரமைக்கப்பட்ட ஃபோன் வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்த நாளை நினைவு கூறுகிறார் யுவராஜ் அமன் சிங். இவர் 34 வயதே நிரம்பிய முதல் தலைமுறை தொழில் முனைவர்.
நிறுவனத்தின் வளர்ச்சி
இன்று ஆப்பிள், சாம்சங், சோனி எரிக்சன்,எல்ஜி, மைக்ரோமாக்ஸ், நோக்கியா , எச்டிசி, சோனி, சியோமி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பெரிய நிறுவனங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும் ஃபோன்களை வாங்கும் இவரின் நிறுவனம், அதை 15000 சதுர அடியில் அமைந்துள்ள தனது பெங்களூர் தொழிற்சாலை அல்லது 3000 சதுர அடி டெல்லி தொழிற்சாலையில் மறு சீரமைப்பு செய்கிறனர்.
5000 சதுர அடியில் நொய்டாவில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக மின்னணுப் பொருட்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் தனது லாபத்தில் 10% ஏற்றுமதி மூலம் ஈட்டுவதாகச் சிங் குறிப்பிடுகிறார். இந்த ஃபோன்கள் புதிய ஃபோன்களை விட 40% குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
உத்திரவாதமும் விற்பனையும்
இந்த ஃபோன்களுக்கு, மறு சீரமைப்பு செய்யும் நிறுவனமே குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அல்லது தயாரிப்பாளர் தரும் உத்தரவாதமே தரப்படுகிறது. இந்த ஃபோன்கள் டெல்லியில் உள்ள 16 கடைகளிலோ அல்லது இணையத்திலோ விற்பனை செய்யப்படுகின்றன.
படிப்பு
சிங், இங்கிலாந்தில் உள்ள மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் நிர்வாகப் படிப்பில் பட்டம் பெற்றவர். இவரது தாத்தாவும். தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அலுவலர்கள். இவர் தற்போது டெக்னிக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ராக்கிங் டீல் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.
ஏமாற்றம்
2003ல் இந்தியா திரும்பும் முன் இவர், இங்கிலாந்தில் உள்ள தனது மைத்துனரின் பண்டக சாலையில் வேலை பார்த்தார். இந்தியா வந்த பின்னர் டாட்டா டெலிசர்வீஸின் விற்பனையாளர் உரிமையைப் பெற்றார்.
டாட்டா ஸ்கை இணைப்புகள் மற்றும் டாட்டா சாதனங்களை அதிக அளவில் விற்றாலும் அந்தத் தொழிலில் லாபம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்தார்.
"டீலர்கள் அதிகப்படியான லாபத்தைத் தாங்கலே எடுத்துக் கொண்டார்கள். விற்பனை சங்கிலியில் தங்களுக்குக் கீழே இருப்பவர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டார்கள்" என்கிறார் சிங்.
தொழில் துவங்குவதற்கான எண்ணம் வரக் காரணம்
2005ம் ஆண்டு, ஒரு முன்னால் டாட்டா பணியாளர் ஒருவர் மூலம் சோனி எரிக்சன் பணியாளர் ஒருவரின் அறிமுகம் இவருக்குக் கிடைக்கிறது. அந்த நபர் சிங்கிற்கு மறுசீரமைக்கப்பட்ட ஃபோன்களை விற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். தெற்கு டெல்லி, நியூ பிரண்ட்ஸ் காலணியில் உள்ள சோனி எரிக்சன் விற்பனையாக வாயிலில் சிங் தொழில் தொடங்கினார்.
அதற்குக் கிடைத்த வரவேற்பையும், அதிக லாபத்தையும் கண்டபின் தனக்கான தொழில் இதுதான் எனத் தான் முடிவு செய்ததாக நினைவு கூர்கிறார்.
சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அதன் பின் 2008ல் சாம்சங் நிறுவனத்துடன் பழைய ஃபோன்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டார். பழைய ஃபோன்களை மறுசீரமைப்பு செய்த பின் அதைப் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்தார். அது வெற்றிகரமான முயற்சியாக அமைந்தது. முதல் வருட முடிவில் அவர் நிறுவனம் 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.
இ-காமர்ஸ் தளத்தில் விற்பனை
இவரின் ஃபோன்கள் இப்போது ஷாப் க்ளுஸ், அமேசான், ஈ பே, ஸ்னாப் டீல், குய்கர், ஜங்லீ மற்றும் ஜாப்பர் முதலான தளங்களிலும் கிடைக்கின்றன. ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனை செய்துவரும் இந்த நிறுவனம் கூடிய விரைவில் மற்ற சில நாடுகளிலும் தனது விற்பனையைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளது.
சோதனை
தங்களது மறு சீரமைக்கப்பட்ட போன்களில் திரை, ஒலி, கேமரா, போர்ட்டுகள் மற்றும் வன்பொருட்களில் கிட்டத்தட்ட ஒரு டஜன் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பின் இந்த ஃபோன்களுக்கு ராக்கிங் டீல் 3 மாதம் முதல் ஒரு வருட உத்தரவாதத்துடன் விற்கப்படுகின்றன.
தரம்
இந்த ஃபோன்கள் மூன்று விதமாகத் தரப் பிரிப்புச் செய்யப்படுகின்றன. கீறல் இல்லாத ஃபோன்கள், சிறிதளவு கீறல் கொண்ட ஃபோன்கள்,சிறிய அளவில் சேதம் அடைந்த ஃபோன்கள் என்று தரம் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ராக்கிங் டீல் நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனங்களான ஃபியூச்சர் டையல், டெராசிஃபார் முதலிய நிறுவனங்களுடன் தகவல்களை அழித்துத் தரவும், சான்றிதழ் தரவும் உடன்பாடு உள்ளது.
லாஜிஸ்டிக்ஸ்
200 தொழிலாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், தங்கள் ஃபோன்களை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யவும், பழுதான ஃபோன்களைப் பெற்று தரவும் DTDC கூறியர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
தனது டெக்னிக்ஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் பணிக்குச் சேர்ந்த பிரேம் சிங், இன்னும் தனது நிறுவனத்தில் பணி புரிவதைப் பெருமையாகக் கருதும் சிங், தனது மூத்த பணியாளர்கள் தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியதாகக் கூறுகிறார்.
நோக்கம்
தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ராகிங் டீல் நிறுவனத்தை ஒரு வணிக மதிப்பு மிக்க அடையாளமாக நிலை நிறுத்துவதே அவரது நோக்கம். "வாங்கி விற்கும் நிலையைத் தனது நிறுவனம் கடந்து விட்டது. எங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த எண்ணுகிறேன்" என்கிறார்.
பங்குகளை வெளியிடும் திட்டம்
இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் பங்குகளை வெளியிடும் திட்டத்தில் உள்ளார். சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களில் 70% பேர், குறைந்த விலை காரணமாக மறு சீரமைக்கப்பட்ட ஃபோன்களை விரும்புவதாக ShopClues கூறியுள்ளது ராக்கிங் டீல் நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.