வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு, அன்மையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, அவர்களுக்குத் தேசிய ஓய்வூதிய அமைப்பு என்றிழைக்கப்படும் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் கணக்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள செய்தியாகும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்க் கணக்கு திறப்பதன் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ஒரு ஓய்வூதிய கணக்கை உருவாக்க முடியும்.
18 வயதிற்கு மேல் மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்க் கணக்கு திறக்க முடியும்.
இந்தக் கணக்கை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நேரடியாகத் திறக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் பவர் ஆப் அட்டர்னி பெற்ற வேறொருவருக்கு அனுமதி கிடையாது.
சந்தாதார் பதிவு படிவம்
தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான சந்தாதார் பதிவு படிவத்தை வெளிநாடும் வாழ் இந்தியர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். இந்தப் படிவத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இது எந்த ஒரு POP - SP அலுவலகத்திலும் கிடைக்கும்.
இந்திய முகவரி வேண்டுமா?
வெளிநாட்டு முகவரி மற்றும் தொடர்பு விவரங்களுடன் நிரந்தரமான இந்திய முகவரியை வழங்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிதி மேலாளரை தங்களுடைய விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
பின்வரும் ஆவணங்களைக் கணக்கு தொடங்கும் பொழுது POP வங்கிகில் சமர்ப்பிக்க வேண்டும்:
1) பூர்த்தி செய்யப்பட்ட சந்தாதார் பதிவு படிவம்
2) பாஸ்போர்ட் நகல்
3) உள்ளூர் முகவரி மற்றும் பாஸ்போர்டில் குறிப்பிடப்பட்ட முகவரி வெவ்வேறாக இருந்தால், கட்டாயம் முகவரிச் சான்று அளிக்க வேண்டும்.
பணத்தை எப்படிச் செலுத்துவது?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை NRO அல்லது NRE வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பொழுது சாதாரண அந்நிய செலாவணி மாற்றம் விதிமுறைகளுக்கு உட்பட்டு கணக்குகளில் பணம் செலுத்தப் படும்.
தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கை வெளிநாட்டில் இருந்து எப்படிச் சரிபார்ப்பது?
ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கின் தற்போதைய நிலைமையை, https://cra-nsdl.com/CRA/ என்கின்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தை அணுக, ஒவ்வொருவருக்கும் 17 இலக்க ரசீது எண் POP-SP அல்லது CRA -FA (வசதியளிக்கும் மையம்) வின் ஒப்புதல் எண், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கும் பொழுது தரப்படும்.
வருமான வரி விலக்கு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், அவர் தேசிய ஓய்வூதிய திட்டம் மூலம், 80 சி நன்மைகளைத் தவிர்த்து ரூ 50000 க்கு கூடுதல் நன்மைகளைப் பெற முடியும்.
தேசிய ஓய்வூதிய எப்படித் துவங்கினால் நல்லது?
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாங்கள் NRE / NRO கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையை POP வங்கியாகத் தேர்வு செய்து இந்த NPS கணக்கைத் தொடங்குவது மிகவும் நல்லது.
வெளிநாட்டு நாணயமாக முதிர்வு தொகை அளிக்கப்படுமா?
ஓய்வூதியம் அல்லது முதிர்வு தொகை கிடைக்கும் நேரத்தில், அந்தத் தொகை இந்திய ரூபாயாக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தாயகம் திரும்ப எந்த ஒரு தடையுமில்லை