ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவைக் கடந்த சில வருடமாக இந்திய மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் இத்துறை சேவையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தும், மக்களைக் கவரும் வகையில் பல முக்கிய ஆஃபர்களை அறிவித்தும் வாடிக்கையாளர்கள் ஈர்த்து அதிகளவில் வர்த்தகத்தை அடைந்தில் ஓலா, உபர் ஆகிய நிறுவனங்கள் மிக முக்கியமானவை.
இதன் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். டாக்ஸி ஓட்டுநர்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
முதலீட்டாளர்
ஓலா, உபர் நிறுவனங்களைப் போலவே மொபைல் மூலம் டாக்ஸி புக் செய்யும் நிறுவனத்தைத் துவங்கி கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இச்சேவையை அளிக்க முடிவு செய்துள்ளார் எச்டி குமாரசாமி.
அனைத்திற்கும் மேலாக இந்த நிறுவனத்தை முழுமையாகத் தனது சொந்த முதலீட்டின் மூலம் உருவாக்க முடிவு செய்துள்ளார் குமாரசாமி.
யுகாதி
இந்நிலையில் முதல்கட்டமாகப் பெங்களுரில் ஓலா, உபர் நிறுவனங்களுக்கு எதிராக HDK Cabs என்ற பெயரில் யுகாதி பண்டிகை அன்று சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஓலா, உபர் நிறுவனங்களைச் சேர்ந்த ஒட்டுநர்களின் போராட்டத்திற்கு எவ்விதமான தீர்வும் கிடைக்காத நிலையில் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.
நிலையான கட்டணம்
இந்நிலையில் சந்தையில் இருக்கும் டாக்ஸி நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலையில், HDK Cabs இரவு, பகல் என்று வித்தியாசம் இல்லாமல் நிலையான கட்டணத்தை விதிக்க முடிவு செய்துள்ளது.
தன்வீர் பாஷா...
பிப்ரவரி மாதம் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்திற்குத் தலைமையாற்றிய தன்வீர் பாஷா கூறுகையில், ஓலா, உபர் நிறுவனங்கள் இரண்டுமே, கட்டண உயர்வு, மறைவு கட்டணம் எனப் பல வகையில் ஏமாற்றி வருகிறது.
மேலும் எந்த நிறுவனமும் நிலையான கட்டணத்தை இதுவரை அறிவிக்காத நிலையில், HDK Cabs நிறுவனத்தின் மினி கேப்களில் ஒரு கிலோமீட்டருக்கு 10 அல்லது 12 ரூபாய், பிரைம் கேப்களில் 12-14 ரூபாய் என்ற நிலையான கட்டணத்தை அறிவிக்கும் திட்டம் உள்ளதாகக் கூறினார்.
எச்டி குமாரசாமி
இந்நிறுவனத்தின் முதலீட்டாளரான எச்டி குமாரசாமி இதுகுறித்துக் கூறுகையில், இந்தச் செயலி வர்த்தக நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை. ஆன்லைன் டாக்ஸி டிரைவர்களின் பிரச்சனையைத் தீர்க்க எவ்விதமான முயற்சிகளையும் மாநில அரசு எடுக்காத நிலையில் தாங்கலே ஒரு ஆன்லைன் டாக்ஸி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். இதன் வெளிப்பாடாகவே HDK Cabs செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டாக்ஸி சந்தையில் ஓலா, உபர் நிறுவனங்களுக்கு எதிராகக் களமிறங்கும் இந்த நிறுவனம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது என்று அவர் கூறினார்.
50 கோடி ரூபாய்
ஆரம்பக் கட்டத்தில் இந்தச் செயலியை உருவாக்க 2-3 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யக் குமாரசாமி, அடுத்த 2 வருடத்தில் 50 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
15,000 ஒட்டுநர்கள்
மேலும் இப்புதிய திட்டத்திற்குப் பெங்களுரில் மட்டும் சுமார் 15,000 ஒட்டுநர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், செயலி உபயோகத்திற்கு வந்தால் 40,000 ஒட்டுநர்கள் வரை இதில் இணைவார்கள் என்று தன்வீர் பாஷா கூறுகிறார்.
வெறும் 5 சதவீதம்
ஓலா, உபர் நிறுவனங்கள் மொத்த கட்டணத்தில் 30 சதவீதத்தைக் கமிஷனாகப் பெறும் நிலையில் HDK Cabs வெறும் 5 சதவீதத்தை மட்டுமே பெறுகிறது. இதனால் ஒட்டுநர்களுக்கு அதிகளவிலான வருமானம் கிடைக்கும்.
டிரிப் எண்ணிக்கை
மேலும் ஊக்கத் தொகையைக் காட்டி ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் பயணத்தை ஒட்டுநர் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இதில் இல்லை. அதேபோல் நிறுவனத்தில் கிடைக்கும் லாபம் அனைத்தும் ஓட்டுநர் நலத் திட்டத்திற்குச் செல்லும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு
HDK Cabs மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு, சேவை, பாதுகாப்பையும் அளித்தால் ஓலா, உபர் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய ஆபத்து.
மேலும் ஓட்டுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் அதிகளவிலான லாபத்தை அடைவார்கள்.