சென்னை: தள்ளு வண்டியிலிருந்து ஐஸ் க்ரீம் பார்லருக்குப் படிப்படியாக முன்னேறி ஒரு ஐஸ் க்ரீம் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்த, அருண் மற்றும் இபாகோ நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள மனிதராகிய திரு. ஆர்.ஜி. சந்திர மோகன் பற்றித் தான் நாம் இன்றைய வெற்றிக் கதையில் பார்க்க இருக்கிறோம்.
சந்திர மோகன் ஒரு பள்ளி மாணவராக இருந்த போது ஐஸ்க்ரீமுக்காக என்று தவறாமல் பணத்தை ஒதுக்கி வைப்பார். குச்சி ஐஸூக்காக 37 பைசாவைச் சேமிப்பார். அப்போதெல்லாம் வெண்ணிலா, பைனாப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர அதிகமான நறுஞ்சுவைகள் இல்லாதபோதும், அவரது உதடுகளில் பேரின்பப் புன்னகையைக் கொண்டுவர அவையே போதுமானதாக இருந்தது.
ஐஸ்க்ரீம் சாம்ராஜ்ஜியம்
இரண்டு சகாப்தங்களுக்குப் பிறகு அவர் இதே துறையில் ஒரு ஐஸ்க்ரீம் சாம்ராஜ்ஜியத்தையே சொந்தமாக உருவாக்குவார் என்று சிறிதளவும் அவரே அறிந்திருக்கவில்லை. நிச்சயமாகச் சார்லி ஒரு சாக்லேட் தொழிற்சாலையைத் பரம்பரையாகத் தொடங்கியபோது இப்படித்தான் உணர்ந்திருப்பார். ஆனால் சந்திர மோகனின் வழக்கில் இவர் புத்தம் புதிதாகச் செங்கல்மேல் செங்கல்லாக அல்லது படிப்படியாக இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
மூலதனம்
"ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ரூ 13,000 மூலதனத்திற்குள் நான் எதையாவது தொடங்க வேண்டும், எனவே நான் 1970 இல் அருண் ஐஸ்க்ரீமைத் தொடங்கினேன். அப்போது எனக்கு 21 வயது" என்று சொல்கிறார் சந்திர மோகன். இந்தத் தொழிற்சாலை அனுமானித்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சிறிய இடத்தில் தொண்டியார் பேட்டையில் 3 அல்லது 4 பேர் வேலை செய்து ஒரு நாளுக்கு 20 லிட்டர் ஐஸ்க்ரீமை மனித உழைப்பில் கைமுறையாகத் தயாரித்தனர்.
முதல் தயாரிப்பு 10 பைசா குச்சி ஐஸ்
10 பைசா குச்சி ஐஸ்தான் அவர்களுடைய முதல் ஐஸ்க்ரீம் வகையாகும். அது தள்ளுவண்டியில் வீதிகளில் கொண்டு சென்று விற்கப்பட்டது. நிச்சயமாக இன்று அது ஒரு மாறுபட்ட கதையாகும். இப்போது ஒரு தானியங்கி சாதனம் ஒரு நாளுக்கு 50,000 லிட்டர் முதல் 75,000 லிட்டர் வரை ஐஸ்க்ரீமை தயாரிக்கிறது.
கடின உழைப்பு
தொடக்கக்காலகட்ட போராட்டங்களுடன் இணைந்த பெரும்பான்மையான வெற்றிக் கதைகள் போலவே, இவரது கதையிலும் வியாபாரத்தில் தொடக்கக்கால வளர்ச்சிசார் கடின உழைப்புகளை இவர் கடந்து வந்ததைப் பார்க்கலாம்.
போட்டி நிறுவனங்கள்
"முதல் 10 வருடங்கள் நாங்கள் மிக அதிகமாகப் போராடினோம். அப்போது முதல் மூன்று உயர் போட்டியாளர்களான தாசபிரகாஷ், ஜாய் மற்றும் க்வாலிட்டி. அவர்கள் நிதியளவில் எங்களைவிட முன்னணியில் இருந்தனர் மற்றும் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு இருந்தது.
மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் பற்றிய அறிவில் எனக்குக் குறைபாடுகள் இருந்தது. நான் ஒரு பட்டதாரியும் அல்ல. எனவே வியாபாரத்தில் நான் போராடியபோது சபரி கல்லூரியில் மார்க்கெட்டிங் மேலாண்மை, ஏற்றுமதியில் மேலாண்மை, தனிப்பட்ட மேலாண்மை ஆகிய பாட நெறிமுறைகளில் பட்டயப்படிப்பைப் படித்தேன்.
அதிகரித்த விற்பனை
முதல் வருடத்தில் எங்கள் விற்றுமுதல் ரூ. 1,15,000. 1981 - இல் எங்கள் வளர்ச்சி தொடங்கியது. 1991 இல் அருண் நிறுவனம் ரூ. 3 கோடி விற்றுமுதலை பதிவு செய்து சாதனைப் படைத்தது". என்று அவர் கூறுகிறார்.
கிளைகள்
சந்திர மோகன் கப்பல்கள், சிறிய உணவகங்கள் (மெஸ்), கல்லூரிகள் ஆகியவற்றிற்கு ஐஸ்க்ரீம் விநியோகிக்கத் தொடங்கினார். நிதானமாக அவர், இதர பிரபலத் தயாரிப்பு நிறுவனங்கள் இன்னமும் கதவைத் தட்டியிருக்காத சந்தைகளான பாண்டிச்சேரி, மதுரை, சிவகாசி மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் கிளைகளை விரித்தார்.
பால் வியாபாரம்
உறைந்தபனி இனிப்புப் பண்டங்ளின் பிரியர்கள் அருண் கொட்டகையிலிருந்து எது வந்தாலும் அதை வரவேற்றுக்கொண்டிருந்த நேரத்தில் சந்திர மோகன் மற்றொரு துணிகர வியாபார முயற்சியில் தன்னை மும்மரமாக ஈடுபடுத்திக் கொண்டார் - அது பால் வியாபாரமாகும்.
ஆரோக்யா பால்
1995 - இல் அவர் ஆரோக்யா பாலைத் தொடங்கினார். "நாங்கள் எங்கள் ஐஸ்க்ரீம் உற்பத்திக்காகப் பாலை அதிக அளவில் கொள்முதல் செய்கிறோம். எனவே அப்போது இந்த யோசனை எங்களுக்கு உதித்தது. இன்று ஆரோக்யா வருடாந்திர விற்றுமுதலாக ரூ 1,300 கோடிகளைப் பார்க்கிறது.
பிற தயாரிப்புகள்
மேலும் நாங்கள் வெண்ணெய், பால்பொடி, நெய் மற்றும் தயிர் ஆகியவற்றையும் கூடத் தயாரிக்கிறோம். நாங்கள் 3,50,000 விவசாயிகளுடன் தொடர்பில் இணைந்துள்ளோம். மற்றும் 8000 கிராமங்களிலிருந்து பாலை வாங்குகிறோம். நாங்கள் ஒன்பது வெவ்வேறு தொழிற்சாலைகளை இயக்குகிறோம் மற்றும் எங்கள் தொழிலாளர்கள் பாலை சேகரிக்கவும் மற்றும் விநியோகிக்கவும் தினமும் 4,20,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்", மேலும் கூடுதலாக, ஹாட்சன் பால் பண்ணைத் தயாரிப்புப் பொருட்கள் நாடு முழுவதும் கிடைக்கப் பெறுகிறது. என்று அவர் கூறுகிறார்.
பால்பண்ணை தொழிற்சாலைகள்
காஞ்சிபுரம், சேலம், மதுரை, பெல்காம், ஹொனாலி ஆகிய இடங்களில் ஹாட்சன் தனது பால்பண்ணைத் தொழிற்கூடங்களைக் கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் அருண் ஐஸ்க்ரீம்
அவர்களுடைய ஐஸ்க்ரீமுக்காகத் தமிழ் நாட்டைத் தவிரச் செய்செல்லஸிலும் கூட ஒரு தொழிற்கூடத்தைக் கொண்டுள்ளனர்.
இதர புகழ்பெற்ற பிரபல சர்வதேச ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சும் செய்செல்லஸ் சந்தையில் அருண் எப்படித் தனது தயாரிப்பை விற்கிறது? "எங்களுக்குச் செய்செல்லஸில் 70 சதவீத பங்கு ஐஸ்க்ரீம் சந்தை விற்பனை உள்ளது. ப்ருனேயில் எங்களுக்கு ஒரு விநியோகஸ்தர் இருக்கிறார். அவர் எங்கள் ஐஸ்க்ரீம்களை வாங்கி அங்கே விற்கிறார். நாங்கள் அங்கே உள்ள உயர்ந்த நான்கு பிரபல ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒருவராக இருக்கிறோம்", என்று கூறுகிறார் இந்தப் பக்குவப்பட்ட தொழிலதிபர்.
ஹாட்சன் - இபாகோ
2012 - ஆம் ஆண்டு, ஹாட்சன் மீண்டும் ஒரு ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரபல நிறுவனமான இபாகோவை தொடங்கியது. இது அருண் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் உயர்ரகச் சகோதர நிறுவனமாகும். மேலும் இது ஐஸ்க்ரீமை கரண்டி கொண்டு எடுக்கும் புதிய வகை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
கரண்டியால் குடைந்தெடுக்கும் ஐஸ் க்ரீம்
"அருண் ஒரு தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட கூம்புகள், கோப்பைகள் மற்றும் குச்சிகளில் வரும் மாதிரி ஆகும். இபாகோவைப் பொருத்தவரை, அது கரண்டியால் குடைந்தெடுக்கும் வகையாகும். நீங்கள் இபாகோ ஐஸ்க்ரீம் வரவேற்பறைக்கு நடந்து சென்று அங்கே உங்களுக்குப் பிடித்தமான நறுஞ்சுவையைத் தேர்ந்தெடுத்து மேற்புறம் தூவி அலங்கரித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
இபாகோ ஐஸ் க்ரீம் கிளைகள்
இப்போதைக்கு, இபாகோ சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் கிடைக்கப் பெறுகிறது. அடுத்த வருடத்தில், நான் அதை மும்பை, பூனே, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிற்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்" என்கிறார் சந்திர மோகன்.
இபாகோவினால் அருண் ஐஸ் க்ரீம் மூடப்படுமா
ஆனால் ஒரு புதிய தயாரிப்பை நிறுவியதால், அருண் புறக்கணிக்கப்படுவதாக அர்த்தம் இல்லை. இந்தப் பருவநிலையில் அருண் அதன் வீச்சை சுவாரஸ்யமானதாகவும் சுவையானதாகவும் ஆக்க, முற்றிலும் புதிய சில நறுஞ்சுவைகளுடன் உங்கள் முன் வருகிறது. அங்கே இதர வகைகளுடன், புதிய பெர்ரி புயல், சாக்லேட் கொண்ட வெண்ணிலா, எலுமிச்சைப் பட்டி, க்ரீம் மற்றும் குக்கீ வகைகளும் இருக்கின்றன.
இவரது விருப்பமான ஐஸ் க்ரீம்
தேர்ந்தெடுக்க எண்ணற்ற வகைகள் கிடைக்கப்பெற்றாலும், உன்னதமான சாக்லேட் கோன் தான் இன்னமும் அவரது விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. "தொடக்கக் காலத்தில், நான் தினமும் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் பயணம் செய்யும்போதெல்லாம் போட்டியாளர்களான இதர பிரபலத் தயாரிப்பு நிறுவனங்களின் சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ள வெளி நிறுவன ஐஸ்க்ரீம்களையும் முயற்சித்துப் பார்க்கிறேன்", என்று கூறி புன்னகைக்கிறார்.
பொழுதுபோக்கு
ஐஸ்க்ரீம், பால்பண்ணை மற்றும் வியாபார வேலைகளுக்குப் பிறகு அவர் தன்னை எவ்வாறு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்? "நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வேன் மற்றும் புத்தகங்கள் படிப்பேன். முன்பெல்லாம் நான் பேட்மின்டன் விளையாடும் வழக்கம் கொண்டிருந்தேன், நான் அந்த விளையாட்டின் தீவிர ரசிகன் மற்றும் பிரகாஷ் படுகோனே போட்டிப் பந்தயங்களில் விளையாடும்போதெல்லாம் நான் பார்க்கச் செல்வேன்.
ரோகர் பெடரர் ரசிகர்
எனக்கு டென்னிஸ் விளையாட்டையும் பார்க்கப் பிடிக்கும், அதிலும் குறிப்பாக ரோகர் பெடரர் விளையாடும்போது. நான் நவம்பரில் அவர் விளையாடுவதைப் பார்க்க லண்டன் செல்லவிருக்கிறேன்", என்கிறார்.
யாருக்குத் தெரியும், ஒருவேளை அந்தச் சுவிஸ் விளையாட்டு வீரர் ஹாட்சனின் நிறுவனத்தின் தர அடையாள விளம்பர தூதுவராகலாம்? இப்போதைக்கு அது ஒரு சிந்தனையாக மட்டுமே இருக்கிறது!
ஹாட்சன் பால் உற்பத்தி
ஹாட்சன் ஒரு நாளுக்கு 18 லட்சம் முதல் 20 லட்சம் லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்கிறது. அதில் பன்னிரெண்டு லட்சம் லிட்டர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அறுபதாயிரம் லிட்டர்கள் ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பால், நெய் மற்றும் வெண்ணெய் நீக்கப்பட்ட பாலைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.