ஏப்.30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை உத்தரவு
ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்தில் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கப்பட வேண்டும்.
அதுமட்டும் அல்லாமல் கணக்கின் உரிமையாளர் அனைவரும் KYC படிவம் மற்றும் FATCA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான கையப்பமிட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம்
ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இதனைச் செய்யத் தவறினால், கணக்குகள் முடக்கப்படவும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
உடனடி திறப்பு
மேலும் முடக்கப்பட்ட கணக்குகளுக்குச் சரியான தகவல்களைக் கணக்கின் உரிமையாளர் அளித்துவிட்டால், வங்கி நிர்வாகத்தால் உடனடியாகக் கணக்கை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனவும் வருவமான வரித்துறை தெரிவித்துள்ளது.
எதற்காக இந்தத் திடீர் உத்தரவு..?
நிதியமைச்சகம் வெளிநாட்டு வரி இணங்குதல் சட்டத்தின் (FATCA) கட்டுப்பாடுகள் அனைத்து வங்கிகளுக்கும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது, அதற்கான பணிகளின் முதல் கட்டமே இது.
அமெரிக்கா
இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்ட வெளிநாட்டு வரி இணங்குதல் சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலமாக இப்புதிய நடவடிக்கையை நிதியமைச்சகமும், வருமான வரித் துறையும் செயல்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்வென்றால், இரு நாடுகளும் வரி விபரங்களைப் பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்டும் வரி ஏய்ப்புகள் அதிகளவில் தடுக்கப்பட்டுக் கருப்புப் பணப் பரிமாற்றத்தை முழுமையாகக் குறைக்க முடியும்.
அனைத்தும்...
மேலும் இந்த இப்புதிய உத்தரவின் மூலம் வங்கி, இன்சூரன்ஸ், பங்குச்சந்தை கணக்குகள் என அனைத்திற்கும் அமலாக்கம் செய்யப்படும் எனவும் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள்
இதனால் இனி பணப் பரிமாற்றம், டெப்பாசிட் என ஏந்தொரு காரணத்திற்காக நீங்கள் வங்கி சென்றாலும் ஆதார் அட்டையின் நகல் மற்றும் ஜெராக்ஸ் காப்பியுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
உண்மையிலேயே இது கருப்புப் பணம் ஆசாமிகளுக்கு வைக்கப்படும் அடுத்தச் செக்.