இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு உருவான ஒரு பொதுத்துறை நிறுவனமே இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் எல்ஐசி ஆப் இந்தியா.
முதன்முதலில் இந்திய மக்களுக்குக் காப்பீடு என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, சேமிப்புக்கு ஊக்கம் கொடுக்க ஊக்கதொகையாகப் போனஸ் என்கிற கவர்ச்சிகரத் திட்டங்களுடன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது எல்ஐசி நிறுவனம்.
எல்ஐசி உள்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம். தனது அபரிமித வளர்ச்சியால் 72% க்கு மேல் லாபம் ஈட்டி 2017 ம் நிதி ஆண்டில் 19,000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக இன்று வானளாவில் உயர்ந்து நிற்கிறது.
நமது பணத்தை எல்ஐசி எங்கு முதலீடு செய்கின்றது?
எல்ஐசி யின் வர்த்தகத்தில் மக்களின் சேமிப்புகள் ITCBSE, ONGCBSE, NHPCBSE, NTPCBSE, SBI, ICICI, COAL INDIA BSE, SAILBSE மற்றும் NMDCBSEஎன்ற நிறுவனங்களின் திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட்டு நல்ல முதிர்வுத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி
எல்ஐசி நிறுவனம் 2016 - 2017ம் ஆண்டில் அரசுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் 40% கூடுதல் போனஸ் மற்றும் ஈவுத் தொகையும் வழங்க முடிவு செய்திருப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயணத்தின் துவக்கம்
இந்திய பாராளுமன்றம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ம் நாள் ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் தொடர்ச்சியாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செப்டம்பர் முதல் தேதி 1956 ம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆயுள் காப்பீட்டு கொள்கையை நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரிவித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் பணியையும் செய்து கூடுதல் பயன் குறித்த திட்டங்களையும் அறிவித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முதிர்வுகளையும் வழங்கத் திட்டமிட்டது.
கிளைகள்
1956 ம் ஆண்டில் அதன் முதன்மை அலுவலகம் தவிர்த்து 5 மண்டல அலுவலகங்கள், 33 கோட்ட அலுவலகங்கள் 212 கிளை அலுவலகங்கள் கொண்டு வளர்ந்தது.
சந்தை விரிவாக்கம்
சில ஆண்டுகளுக்குள்ளாகவே எல்ஐசி நிறுவனம் மேலும் பல புதிய கிளைகளைத் திறந்தது. 1957 ல் 200 கோடி புதிய வர்த்தகத்தைக் கொண்டிருந்த நிறுவனம் அடுத்தப் பத்து ஆண்டுகளில் அதாவது 1969-70 களில் 1000 கோடியைத் தாண்டியது. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 2000 கோடி வர்த்தகம் என்ற இலக்கையும் எட்டியது.
பரந்து விரிந்த கட்டமைப்பு
இன்றைய நாளில் எல்ஐசி நிறுவனம் 2048 முழுதும் கணினி மயமாக்கப்பட்ட கிளை அலுவகங்களைக் கொண்டிருப்பதுடன், 113 கோட்ட அலுவலகங்கள், 8 மண்டல அலுவலகங்கள், 1381 இணையத் தொடர்பு அலுவலகங்களுடன் ஒரு முதன்மை நிருவாக அலுவலகத்தையும் கொண்டிருப்பதாக வளர்ந்துள்ளது. எல் ஐ சி யின் பரந்த கட்டமைப்பில் 113 கோட்ட அலுவலகங்களுடன் அனைத்து அலுவலகங்களும் மாநகர இணையத் தொடர்பு கொண்டு இணைக்கப்பட்டு மக்களுக்குச் சிறப்பான உடனடி சேவையை வழங்கி வருகின்றது.
நிலையான வளர்ச்சி விகிதம்
எல்ஐசி நிறுவனம் இந்திய காப்பீட்டுத் துறையில் ஆளுமை பெற்ற நிறுவனமாக உயர்ந்து விளங்கி விரைவான 16.67 சதவீத வளர்ச்சியையும் பெற்றுக் கோலோச்சி வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் ஒரு கோடி பாலிசி களுக்கு முதிர்வு தொகைகளையும் வழங்கி உள்ளது.
தொடரும் பயணம்
அந்த நாளிலிருந்து இன்று வரை எல்ஐசி நிறுவனம் தனது சீரிய முயற்சிகளினால் வளர்ச்சிகளினால் பல்வேறு மைல்கற்களைக் கடந்து வீறுநடை போட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய காப்பீட்டு வர்த்தகத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்து இன்று வரையில் ஆளுமை பெற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.