ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோர் ரேட்டிங் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கிரெட்ட் ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 10 வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தொகையைக் கட்டத் தவறியதால் சில வங்கி நிர்வாகங்கள் "சிறப்புக் குறிப்பு கணக்கு" என்று வகைப்படுத்தியுள்ளனர்.
சிறப்புக் குறிப்பு கணக்கு என்றால் என்ன?
சிறப்புக் குறிப்பு கணக்கு என்ற வகைப்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் கடன் வாங்கிய தொகைக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாத போது குறிப்பிடப்படுவது ஆகும். கடன் வாங்கிய ஒருவர் 30 நாட்கள் தவணையின் வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்தாமல் இருந்தால் சிறப்புக் குறிப்பு கணக்கு 1 எனக் குறிப்பிடுவார்கள். இதுவே 60 நாட்களாகச் செலுத்தவில்லை என்றால் சிறப்புக் குறிப்பு கணக்கு 2 என ஆகும். 90 நாட்கள் வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்தாமல் இருந்தால் கடன் தொகையைச் செயல்படாத சொத்துக் கணக்கில் வைக்கப்படும்.
ரிலையன்ஸ் மீதான சிறப்புக் குறிப்பு கணக்கு எப்படி இருக்கும்?
இதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொகை சில வங்கி நிர்வாகங்கள் சிறப்புக் குறிப்பு கணக்கு 1 அல்லது 2 ஆகக் குறிப்பிட வாய்ப்புள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ஸ் தலத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வங்கிகள் இந்தக் கணக்கை செயல் படாத கணக்கு பட்டியலிலும் சேர்க்க முடிவு செய்துள்ளன.
மதிப்பீட்டு நிறுவனங்கள்
கேர் மற்றும் ஐசிஆர்ஏ இரண்டு மதிப்பீட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளதால் பங்குகளின் விலை 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
ரேட்டிங் நிறுவனங்களுக்குச் சிறப்புக் குறிப்பு கணக்கு குறித்த விவகாரம் தெரியாது என்று கூறப்படுகின்றது. தொலைத்தொடர்பு துறையில் புதிதாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியால் சமாளிக்க முடியாததால் இந்த மதிப்புக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு
ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு டீல் முடிந்த பிறகு 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 25,000 கோடி கடனை திருப்பிச் செலுத்துவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலாண்டு அறிக்கை
ஜனவரி - மார்ச் மாத காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் வருவாய் 966 கோடி நட்டமாகவும், இது தொடர்ந்து இரண்டாவது காலாண்டு நட்டம் என்றும் கூறியுள்ளது. ஆர்காம் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை சரிவு நிறுவனத்திற்கு மேலும் நிதி சிக்கலை அளித்துள்ளது.
கடன் அளவு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மார்ச் 31 வரை 42,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனைக் குறைக்க ஏர்செல் மற்றும் ப்ரூக்பீல்டு நிறுவனத்திற்குத் தனது டவர் பங்குகளில் 51 சதவீதத்தை விற்றுள்ளது.
ஜியோ நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய ஆர்காம்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட போது புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருகையால் லாபம் ஒரு வருடத்திற்கு முன்பு பெற்ற 90 கோடியை விட லாபம் குறைந்துள்ளதாக அறிவித்தது.
20 வருடங்களுக்குப் பிறகு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷஸ் நிறுவனம் 20 வருடங்களில் முதன் முறையாக வருவாய் சரிந்துள்ளதாகவும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், செயல்பாடு சரிவும் அதிகரித்து வரும் வட்டி, அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் போட்டி நிறுவனங்களின் விலை குறைப்பு, அதிக ஸ்பெக்டர்ம் கொள்முதல் போன்றவையால் லாபம் சரிந்துள்ளதாக அறிக்கையில் கூறியிருந்தது.
ஐசிஆர்ஏ
ஐசிஆர்ஏ மதிப்பீட்டு நிறுவனம் ஆர்காம் குழுமத்தின் மதிப்பீட்டை BBB என்பதில் இருந்து BB ஆகக் குறைத்துள்ளது. ஆர்காம் குழுமத்தின் கீழ் ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் இரண்டு நிறுவனங்களும் உள்ளன.