நாம் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதி வீட்டு வாடகைக்குச் செல்கிறது, இதனாலேயே பலரும் சொந்த வீடு வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். வீடு வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாத பண நெருக்கடியைப் பலரும் சந்தித்து இருப்போம். இவர்களுக்காகவே பிரிட்டன் நிறுவனம் புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய வசதியின் மூலம் எவ்விதமான தடையுமின்றி வீட்டு வாடகையை எளிதாகச் செலுத்தலாம்.
பிரிட்டன் நிறுவனம்
இந்தியாவில் நிதி சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் நாட்டின் ரெட்ஜிராபி பின்டெக், RentPay என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் சில நொடிகளில் தங்களின் வீட்டுவாடகையைச் செலுத்த முடியும் என ரெட்ஜிராபி பின்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்தத் திட்டம்..
தற்போதைய நிலையில், இந்நிறுவனம் எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இனட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய வங்கிகளின் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இந்தச் சலுகையை அளிக்கிறது.
எப்படிப் பெறுவது..?
ரெட்ஜிராபி இணையதளத்தில் இருக்கும் RentPay சேவையின் கீழ் முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதன் பின் உங்களுடைய வீட்டு உரிமையாளர் மற்றும் உங்களின் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின் வாடகை ஒப்பந்தத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணிகள் அனைத்தும் செய்து முடித்த பின் உங்களுக்கு ரெட்ஜிராபி-ஐடி கிடைக்கும். இந்த ஐடி-யை உங்களுக்குக் கிரெடிட் கார்டு கொடுத்த வங்கியில் கணக்குடன் இணைக்க வேண்டும்.
மாதம் மாதம்..
இந்த இணைப்பிற்குப் பின் ஒவ்வொரு மாதமும், சரியான தேதியில் உங்கள் கிரெடிட் கார்டு வாயிலாக வீட்டு உரிமையாளர் கணக்கிற்கு வாடகை சென்றடைந்து விடும்.
கட்டணம்
இதற்காக RentPay தளம் கட்டணமாக 0.39% மற்றும் வரியைக் கட்டணமாகப் பெறுகிறது. எஸ்பிஐ கார்டுகள் தவிர்த்துப் பிற அனைத்து வங்கிகளுக்கும் குறைந்தபட்சம் 39 ரூபாயை கட்டணமாகப் பெறுகிறது ரென்ட்பே.
இதன் படி 10,000 ரூபாய் வாடகைக்கு 39 ரூபாய்க் கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ கார்டு உள்ளவர்கள் 1.75 சதவீதம் மற்றும் வரிகளைச் சேர்த்துக் கட்டணமாக அளிக்க வேண்டும்.
பிற அனைத்துத் தனியார் வங்கிகளை விடவும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகளவிலான கட்டணத்தை வசூல் செய்கிறது.
கூடுதல் பயன்கள்
இந்தக் கிரெடிட் கார்டு பரிமாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர் ரிவார்டு பாயின்ட் பெறலாம். 200 பாயின்ட்கள் சேர்த்த பின்னர் அதனைப் பொருட்களாகவும், கிப்ட் வவுச்சராகவும் பெறலாம்.
இந்தத் தொகையை வங்கி விதிகளுக்கு உட்பட்டு 45-60 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவும் செய்யலாம்.
வீட்டுக்கடன்
மேலும் இந்நிறுவனம் வீட்டு கடன் வாங்க திட்டமிடுவோர், கிரெடிட் ஸ்கோர் 730க்கும் அதிகமாக வைத்திருந்தால் வட்டி விகிதத்தில் சலுகையும் உண்டு என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உதாரணமாக 1 கோடி ரூபாய் வீட்டு கடன் கொண்டவர்கள் Rentpay சேவையைப் பயன்படுத்தினால் வருடத்திற்கு 80,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம் என ரெட்ஜிராபி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் நாயர் தெரிவித்துள்ளார்.