ஈரோடு: ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சதீஷ் குமாருக்கு 20 ஏக்கர் சொத்து இருந்தது. அந்த நிலத்தில் வேலை செய்வது சவாலாக இருந்த போதும் மிகப் பெரிய கனவுடன் இருந்துள்ளார் சதீஷ்.
ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் தான் சதீஷ் குமார். 8 வகுப்பை முடித்த உடன் தந்தையின் பால் வியாபாரத்தை செய்ய துவங்கினார்.
இப்போது இவருக்கு 40 வயது, படிப்படியான வளர்ச்சி, புதிய புதிய ஐடியாக்களின் மூலம் மில்கி மிஸ்ட் டைரி நிறுவனம் தென் இந்தியா முழுவதும் முக்கிய ஸ்டோர்களில் அமுல், ஹட்சன் நிறுவன தயாரிப்புகளுக்குப் போட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தனிச் சிறப்பு.
இன்று இவரது சொத்து மதிப்பு 200 கோடிக்கும் அதிகம்.
வருவாய்
2013-2014 நிதி ஆண்டில் மட்டும் 121 கோடி ரூபாய் வருவாயினை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 220 கோடி. இவரது இலக்கு 2020-ம் ஆண்டுக்குள் 3,000 கோடி ரூபாய் பெறுவது ஆகும் என்கிறார்.
2007-2008 நிதி ஆண்டில் இவரது நிறுவனத்தின் மொத்த வருவாய் 13 கோடியாக இருந்தது.
13 கோடியில் இருந்த வருவாய் படிப்படியாக உயர்ந்து தற்போது 300 கோடி ரூபாயிக்கும் அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார் சதீஷ் குமார்.
வணிகம்
இன்று வருடத்திற்கு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்று வரும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் பன்னீர் மூலமாகவும், 30 சதவீதம் தயிர் பொருட்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களும் தயாரிப்பாளர்களும்
மில்கி மிஸ்ட் நிறுவனம் ஈரோடு அருகில் உள்ள சித்தோடில் 300 ஊழியர்களுடன் இயங்கி வருகின்றது.
பன்னீர், வெண்ணெய், தயிர், சீஸ், நெய், லஸ்சி, ஐஸ் கிரீம் மற்றும் பாயசம் போன்ற தயாரிப்புகள் விற்பனை செய்கின்றனர். இங்குச் செய்யப்படும் பல தயாரிப்பாளர்கள் செமி ஆட்டோமேட்டட் மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது.
விசைத் தறி
சதீஷ் அவர்களுக்கு வணிகம் மீதான ஆர்வம் தனது தந்தையிடம் இருந்து வந்தது என்று கூறலாம்.
இவரது தந்தையும், அவரின் அண்ணன் தம்பிகளும் முதலில் விசைத் தறி வணிகம் செய்து வந்தனர். மூன்று வருடம் அதனை நடத்திய பிறகு வேண்டாம் என்று விற்றுவிட்டனர்.
பால் வணிகம்
பின்னர் பால் வணிகத்தில் ஈடுபட்டனர். அருகில் மாடு வைத்துள்ளவர்களிடம் இருந்து பால் வாங்கி அதனைப் பெங்களூருக்கு கேன் மூலம் அனுப்பி வைக்கத் துவங்கினர். ஒரு நாளைக்கு 3,000 லிட்டர் பால் இவர்கள் விற்பனை செய்துவந்தனர்.
சதீஷ் வணிகத்தில் நுழைதல்
ஆனால் அதில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இல்லாததால் இவரது சித்தப்பா 1990ம் ஆண்டு வணிகத்தினை விட்டு வெளியேறினார்.
1992-ம் ஆண்டு இவரது தந்தையும் மூடி விடலாம் என்ற முடிவை எடுத்தார். அப்போது தான் சதீஷ் அந்த வணிகத்தினைச் செய்ய முன்வந்தார்.
எதிர்ப்பு இல்லை
குடும்பத்தினரிடம் இருந்து படித்தாக வேண்டும் என்று பெரிதாக எதிர்ப்பு இல்லை. எனவே சதீஷ் குமார் தனது பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வியாபாரம் செய்வதில் 16 வயதில் இறங்கினார்.
வணிகத்தினை வளர்ச்சி செய்யத் திட்டம்
பால் வணிகத்தினைப் பெரிதாகச் செய்ய நினைத்த சதீஷ் தனது வாடிக்கையாளர் பெங்களூருவில் தங்களிடம் இருந்த பெற்ற பாலைப் பன்னீர் செய்து வெற்று நல்ல லாபத்தினைப் பெற்றுள்ளதை கண்டறிந்தார்.
பன்னீர் செய்வது எப்படி?
அப்போது ஏன் நாமும் பன்னீர் செய்யக் கூடாது என எண்ணி யாரிடம் உதவிக் கேட்பது என்று தெரியாமல் இருந்தார். அப்போது இதுபோன்ற விவரங்களைத் தேடி அறிவது சிரமமாக இருந்தது.
பின்னர் சூடான பாலில் வினிகர் சேர்த்து பன்னீர் செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்த போது நல்ல தரமான பன்னீர் கிட்டியது.
முதல் முறையாகப் பன்னீர் வணிகம்
முதன் முறையாக 1993-ம் ஆண்டு 10 கிலோ பன்னீரை பெங்களூருவுக்கு அனுப்பினார். உணவகங்களுக்கு அதிகளவில் சப்ளை செய்யத் துவங்கி 1995-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிலோ பன்னீரை எந்தப் பிராண்டு பெயரும் இல்லாமல் விற்று வந்தார்.
பன்னீர்
1995-ம் ஆண்டு முழுமையாகப் பால் வணிகத்தினை விட்டுவிட்டு பன்னீர் மட்டும் எனக் கவனம் செலுத்தினார். இரண்டு வருடத்தில் வணிகம் பெறுக சில்லறை வணிகப் பிரிவில் இறங்க முடிவு செய்கிறார்.
மில்கி மிஸ்ட் பெயர் வர காரணம் என்ன?
அப்போது தான் பிராண்டு பெயர் தேவைப்பட்டது, இதற்காக இணையதள மையத்திற்குச் சென்று உலகளவில் பெயர் சென்று சேரும் வகையிலும், எளியயாகவும், எந்த மதத்தினைக் குறிக்கும் வகையில் இல்லாமலும் இருக்கக் கூடிய மில்கி மிஸ்ட் பெயரை தேர்வு செய்தார்.
இயந்திரங்கள்
ரீடெய்ல் பிரிவில் இறங்கியதால் இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். பின்னர் 1998-ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்றுச் செமி ஆட்டோமெட்டிக் நிறுவனத்தினைத் துவங்கினார். அந்த இயந்திரங்களைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியும் வருகின்றார்.
முக்கிய நகரங்களில் வணிகம்
1990-ம் ஆண்டுகளில் மில்கி மிஸ்ட் பன்னீர் சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய சில நகர ஸ்டோர்களில் மட்டும் கிடைக்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் விற்பனை வளர்ச்சி 80 சதவீதமாக இருந்தது.
சொந்த கட்டிடம்
இதுவே 2001-ம் ஆண்டு வாடகைக்கு இருந்த தயாரிப்பு ஆலையில் இருந்து சொந்த கட்டடத்திற்குச் சித்தோடில் மாறினார்கள். அப்போது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2 கோடியாக இருந்தது.
மீண்டும் பால் வணிகம்
இந்தச் சமயத்தில் மீண்டும் பால் வணிகத்தில் இறங்கினார்கள். ஆனால் பன்னீர் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் 2005-ம் ஆண்டு அதனை மீண்டும் நிறுத்திவிட்டு கோவா, நெய் வணிகத்தில் இறங்கினார்.
லோகோ
2007-ம் ஆண்டு முதன் முறையாக நிறுவனத்திற்காக லோகோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2008-2010ம் நிதி ஆண்டில் தென் இந்தியாவில் குளிர் சேமிப்பு, தளவாடங்கள் மற்றும் விநியோக வலைப்பின்னலில் ஈடுபட்டுள்ளனர்.
விளம்பரம்
2010-ம் ஆண்டு முதன் முறையாகத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யத் துவங்கினர், இப்போது தென் இந்தியா முழுவதும் பன்னீர் என்றால் மில்கி மிஸ்ட் என்றாளவில் வளர்ந்துள்ளது.
இந்திய அளவில் பன்னீர்
இன்று இந்தியாவில் அதிகளவில் பன்னீர் தயாரிக்கும் ஆலையாக மில்கி மிஸ்ட் வளர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டு 3 டன்னாக இருந்த தயாரிப்பு இப்போது 20 டன்னாக வளர்ந்துள்ளது.
பெப்சி கோக்
2011-ம் ஆண்டிற்குப் பிறகு மில்கி மிஸ்ட் வணிகம் பெறும் அளவில் வளர்ந்துள்ளது. மேலும் பெப்சி கோக் போன்று தங்களது தயாரிப்புகளை வைத்து விற்குக் குளிர்சாதனப் பெட்டிகளையும் விற்பனை செய்துள்ளனர். இதுவரை 2200 மில்கி மிஸ்ட் குளிர் சாதன பெட்டிகளை இவர்கள் வழங்கியுள்ளனர்.
ஒரு நாள் உற்பத்தி
மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 40,0000 முதல் 50,000 லிட்டர் வரை பால் 2012-ம் ஆண்டுத் தேவைப்பட்டது. அது இன்று 2 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
கொள்முதல்
ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறும் அளவு பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. எஜெண்ட் இல்லாமல் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யப்படுவதால் மாடு வளர்ப்பாளர்களுக்கு 5 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கின்றது.
வீடியோ
தென் இந்தியாவில் பன்னீர் உணவை ஊக்குவிக்கும் வண்ணம் சஞ்சிவ் கபூர் அவர்களை வைத்து 100 சமையல் வீடியோவை வெளியிடும் திட்டத்தில் மில்கி மிஸ்ட் உள்ளது.
குடும்பம்
சதீஷ் அவர்களுக்கு அனிதா என்ற கணினி பட்டதாரி மனைவியும், சஞ்சய் மற்றும் நிதின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது மனைவிக்கு இந்த வணிகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து அனைத்தும் தெரிந்தும் தங்ளது பிள்ளைகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சிக்கல்
சதீஷ் அவர்களுக்குத் தற்போதைக்கு ஒரே சிக்கல் தான், இவரது இரண்டாவது மகன் பள்ளி படிப்பை முடிக்காத நீங்கள் இந்த அளவிற்குச் சாதித்து இருக்கும் போது நான் ஏன் படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டு தொல்லை செய்கின்றாராம்.
வணிகத்தில் உள்ள சிக்கல்களுக்கு விடை காணுவதை விட இவரது மகன் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிக்கமுடியவில்லை என்று சதீஷ் கூறுகிறார்.