2016 நவம்பர் மாதம் முதல், பணப் புழக்கத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் வங்கிகளில் வந்து சேர்ந்துள்ளது.
மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டின் தடை அறிவிப்பின் (Demonetisation) மூலம் இதுவரை இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் 2வது பாகம் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கருப்புப் பணம்
99 சதவீதம் 500 மற்றும் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வந்துள்ளது, இதனால் கருப்புப் பணம் முழுமையாகக் களையப்பட்டுள்ளதா என்றால் இல்லை. ஆனால் மத்திய அரசால் இந்தப் பணத்தைத் தற்போது முழுமையாகக் கண்காணிக்க முடியும்.
இதன் மூலம் வரும் காலத்தில் கருப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய முடியும் என்பதே பணமதிப்பிழப்பின் அடிப்படை வெற்றியாக மத்திய அரசு பார்க்கிறது.
வருமான வரி செலுத்துவோர்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகப்பெபிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. காரணம் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் வங்கி கணக்கில் அதிகளவில் வைப்புச் செய்யப்பட்டவர்கள் இந்த வருடம் வருமான வரிச் செலுத்தியாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் வருமான வரி செலுத்தும் தனிநபர்களின் எண்ணிக்கை 25.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட்5ஆம் தேதி வரை 2.79 கோடி பேர் வருமான வரி செலுத்துகின்றனர். இது கடந்த வருடத்தை விடவும் 55 லட்சம் பேர் அதிகமானது.
கண்காணிப்பு
இந்திய சந்தையில் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாயின் மதிப்பு 15.4 லட்சம் கோடி ரூபாயில் 99 சதவீதம் வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முழுமையான வெற்றி இல்லை என்றாலும், இனிவரும் காலத்தில் இந்த 99 சதவீத பணத்தை எளிமையாகக் கண்காணிக்கலாம்.
மேலும் இந்தப் பணம் தற்போது வெள்ளையாக மாறியுள்ளது என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதிலிருந்து எவ்விதமான வரியும் அரசுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
400 பரிமாற்றங்கள்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மே23 வரையிலான காலத்தில் சுமார் 400 பினாமி பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதை வரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 600 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடைக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
பணமதிப்பிழப்புப் பின் சுமார் 2 லட்சம் ஷெல் நிறுவனங்களை மத்திய அரசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 3 லட்சம் நிறுவனங்கள் முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக வருமான வரித்துறை சந்தேகிக்கிறது.
மேலும் 1 லட்சம் நிறுவனங்கள் அரசின் தனிப்பட்ட கண்காணிப்பில் உள்ளது.
37,000 ஷெல் நிறுவனங்கள்
கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாகவும், முறைகேடான ஹவாலா பணப் பரிமாற்றம் செய்த 37,000 ஷெல் நிறுவனங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதில் 163 நிறுவனங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
டேட்டா அனலிடிக்ஸ்
இதுமட்டும் அல்லாமல் கருப்புப் பணம் அனைத்தும் வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளதை அடுத்த அதனை முறையாகக் கண்காணிக்க மத்திய அரசு அதிநவீன டேட்டா அனலிடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய சந்தையில் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தை முழுமையாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
வெற்றியா..? தோல்வியா..?
இங்கே பட்டியலிடப்பட்ட அனைத்தும் மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் தடைக்குப் பின் ஏற்பட்டது.
இந்த நடவடிக்கை சாமானியர்களை வாட்டிவதைத்தது நாம் மறக்க முடியாது என்றால், மக்கள் மத்தியிலும் மோசடியாளர்கள் மத்தியில் குவிந்துக்கிடக்கும் கருப்புப் பணம் தற்போது வெளிவந்துள்ளது வெற்றியே. ஆனால் 2,000 ரூபாய் நோட்டாகத் தற்போது மீண்டும் கருப்புப் பணம் சேர்ந்துள்ளதையும் நாம் மறுக்க முடியாது.
இதனைக் கண்டறியவே மத்திய அரசும், நிதியமைச்சகமும் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஆகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முழுமையான வெற்றி அடைவில்லை.
2வது பாகம்
பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்லவே மத்திய அரசு இத்திட்டத்தின் 2வது பாகம் தற்போது அதிரடியாகத் துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பங்கு சந்தை முதல் தனிநபர்கள் வரை அனைவரும் வருமான வரிக் கணக்கை சரியாகக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.