ஆந்திர பிரதேசத்தில் விஷாகபட்டினத்தைச் சேர்ந்த மூத்த நகராட்சி அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சிக்கியுள்ளார்.
கோலா வெங்கட்ட ரகுராமி ரெட்டி எனப்படும் இவர் மாநில அரசின் கீழ் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீடு மற்றும் 15 இடங்களில் நேற்று சோதனையிட்ட ஆந்திர பிரதேச ஊழல் தடுப்பு ஆணையம் இதனைக் கண்டறிந்துள்ளது.
ஓய்வு
புதன்கிழமையுடன் ஓய்வு பெற இருந்த ரெட்டி வெளிநாட்டில் தங்களது குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கோலாகலமாகப் பார்ட்டி கொடுக்க விமான டிக்கெட் முதற்கொண்டு அனைத்தையும் புக் செய்துள்ளார்.
அசையா சொத்து
ஷீர்டியில் இவருக்குச் சொந்தமாக ஹோட்டலும், விஜயவாடாவில் 300 ஏக்கர் மதிப்பிலான சொத்தும் இவருக்கு உள்ளது. ஊழல் தடுப்புத் துறை இவரது வீட்டைச் சோதனையிட்டபோது 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இவரது இடம் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
மாங்காய் தோப்பு
கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கர் மாங்காய் தோப்பு, விஜயவாடாவில் அடுக்கு மாடி குடியிருப்புகள், குண்டூரில் 5.15 ஏக்கர் சொத்து எனத் தனது பதவிக் காலத்தில் வாங்கிக் குவித்துள்ளார்.
நான்கு நிறுவனங்கள்
சாய் சாதனா பிராஜெக்ட்ஸ், சாய் சாரதா அவின்யூ, மாதா இன்பிராஸ்ட்ரக்ச்சர்ஸ், நல்லுரிவாரி சாரிட்டபள் டிரஸ் என 4 நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.
விலை மதிப்பற்ற பொருட்கள்
ரெட்டியிடம் இருந்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளி என நகைகள் 10 கிலோவிற்கும் அதிகமாகக் குவிந்து இருந்துள்ளன. தங்க நகைகள் மதிப்பு 4 கோடி ரூபாய் எனவும், வெள்ளி நகை மதிப்பு 5 லட்சம் ரூபாய் எனவும் கூறப்படுகின்றது. வெள்ளியாக மட்டும் 25 கிலோ வைத்து இருந்துள்ளார்.
இரண்டு நாட்களாக நடைபெறும் சோதனை
திங்கட்கிழமை காலை இவரது வீட்டில் துவங்கிய சோதனையும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடந்துள்ளது. பின்னர் மொத்தமாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இவர் வசம் இருந்தது தெரியவந்துள்ளது.
வங்கி லாக்கர்
மேலும் இவரது வங்கி லாக்கர் உள்ளிட்டவற்றை இனிமேல் தான் திறக்க இருப்பதாகவும், அவற்றைத் திறந்த பின்பு முழு அறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைது
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து வைத்து இருந்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரெட்டியை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பினாமி
ரெட்டியின் வீடு மட்டும் இல்லாமல் இவரது பினாமி உறவினர்கள் வீடு, நிறுவனங்கள் என மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உறவினர் வெங்கட்ட சிவபிரசாத்
விஜயவாடாவைச் சேர்ந்த இவரது உறவினர் வெங்கட்ட சிவபிரசாத் வீட்டை ஆராய்ந்த போது 19 கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கியுள்ளன.
மேலும் சிவபிரசாத்தின் மனைவி வசம் இருந்து தங்க நகைகள் மற்றும் மங்களகிரியில் உள்ள 16 பிளாட்டுகள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ரெட்டிக்கு மொத்தமாக 8 நபர்கள் பினாமியாகச் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு அவர்கள் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.
அரசு வேலை
கோலா வெங்கட்ட ரகுராமி ரெட்டி 1988-ம் ஆண்டு நகரத் திட்டமிடல் துறையில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து பின்னர் நெல்லூர், ஆனந்தபூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.