இன்று 5,000 ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? சேமிப்பு செய்யும் மனோநிலையில் இருப்பவர்கள் வங்கி அல்லது அஞ்சலகச் சேமிப்பில் வைப்பார்கள், இன்னும் சிலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். 5000 ரூபாய்க்கு என்ன வாங்க முடியும் நினைக்காதீர்கள், நிறையப் பங்குகள் உண்டு. இன்னும் சிலர் ஜாலியா செலவு செய்வார்கள்.
இதுவே 30 வருடங்களுக்கு முன் உங்களிடம் 5000 ரூபாய்க் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..? இது இன்று எப்படி இருந்திருக்கும் என்று சின்னக் கணக்குப்போட்டுப் பாருங்கள். கண்டிப்பாக 5,500 கோடி ரூபாயாக உயர்ந்திருக்காது.
இதைத்தான் செய்துள்ளார் சவுந்தரராஜன்.
தூக்கம்..
ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் துவங்கத் தூக்கம் மிகவும் அவசியம். இரவு 8.30 -9 மணிக்கே தூங்கிவிட்டு காலை 5 மணிக்கே எழுந்துடுவேன், சுமார் 8 மணிநேரம் தூக்கம் என்பது அழுத்தமாகக் கூறுகிறார் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரான 53 வயது பி.சவுந்தரராஜன்.
சுகுணா ஹோல்டிங்ஸ்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உடுமலைபேட்டையில் பிறந்த சவுந்திரராஜன் தான் இந்த 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளார்.
இளமை, கல்வி, விவசாயம்
பள்ளி கல்வியை 11வது வகுப்பிலேயே முடிந்துகொண்ட சவுந்திரராஜன், அரசு பள்ளி ஆசிரியரான தந்தையின் அறிவுரையில் பெயரில் விவசாயத்தைத் துவங்கினார்.
கல்லூரி படிப்பை முடித்தாலும், நான் வேலைக்காகத் தேடி அலைய வேண்டும் என்பதை உணர்ந்த என் தந்தை விவசாயம் செய்ய என்னை ஊக்கப்படுத்தினார். சவுந்திரராஜன் சுமார் 3 வருடங்களாகக் காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நஷ்டம்..
சவுந்திரராஜன் செய்துவந்த விவசாயத்தில் 2 லட்சம் வரையிலான நஷ்டத்தைச் சந்தித்த பின்பு, கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு பர்னீச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் 1.5 வருடம் வேலைக்குச் சென்றார், அதன் பின் ஹைதராபாத்துக்குத் தனி ஆளாக விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை மற்றும் மார்கெட்டிங் அதிகாரியாகச் சேர்ந்தார்.
அனுபவம்
எனக்குத் தெலுங்குவோ அல்லது ஆங்கிலமோ தெரியாது, ஆனால் புது ஊரில் புதிய மக்களிடம் பழகி பம்புகளை விற்பனை செய்தது பெரிய அளவிலான அனுபவம் கிடைத்தது.
தாய் மண்
ஆனால் தொழிற்சாலையோ போராட்டம், சந்தைத் தேவைக்கு ஏற்றப் பொருட்களைத் தயாரிக்கவில்லை, அதனால் இந்தப் பணியில் விரும்பம் குறைந்து பணியை விட்டுவிட்டு மீண்டும் ஊருக்கே திரும்பிவிட்டார்.
தம்பி உடையான் படைக்கு அஞசான்
சொந்த ஊருக்கே வந்த சவுந்திரராஜன் தனது தம்பியுடன் இணைந்து முதல் முறையாகக் கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை வர்த்தகத்தில் இறங்கினார்.
சாம்ராஜியம்
அன்று துவங்கிய வர்த்தகம் தான் இன்று சுகுணா ஹோல்டிங்கஸ் கீழ் கோழி பண்ணை வர்த்தகம், சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனப் பல நிறுவனங்களைக் கோயம்புத்தூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் இருந்து சவுந்திரராஜன் நிர்வாகம் செய்து வருகிறார்.
விவசாயிகள்
சுகுணா ஹோல்டிங்கஸ் நிறுவனத்தின் 98 சதவீத முதலீடு சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 23,000 விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.
1990 முதல்..
கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை தொழிலில் 1984ஆம் ஆண்டு முதல் சவுந்திரராஜன் மட்டும் அவரது தம்பி இருந்து வந்தாலும், 1990ஆம் ஆண்டு முதலே ஒப்பந்த வளர்ப்பு முறையை இவர்களின் கூட்டணி தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது.
ஒப்பந்த கோழி வளர்ப்புத் திட்டம்
இந்த முறையில் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கோழி வளர்ப்புக்கான கட்டமைப்புகளை அவர்களது சொந்த இடத்திலேயே சவுந்திரராஜன் அமைத்துத் தருவார்.
இதுமட்டும் அல்லாமல் கோழிகள், அதற்கான தீவனம் மற்றும் மருந்துகள் என அனைத்தையுமே இவர்கள் வழங்குவார்கள்.
2 வருடத்தில் பணம்
1990களில் ஒரு விவசாயி 1.20 லட்சம் ரூபாய் முதலீட்டில் 8,000 சதுரடியில் 5,000 கோழிகளை வளர்த்தால் முதலீடு செய்த பணத்தை வெறும் இரண்டே வருடத்தில் திரும்பப்பெறலாம்.
45 நாட்கள்
ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகளிடம் கோழிகளை வாங்கி வெளிச்சந்தையில் விற்பார்கள். கோழியின் ஒரு கிலோ எடைக்கு 1990களில் 50 பைசா கொடுப்பார்கள், தற்போது இதன் அளவு 5 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும்
முதல் உடுமலைபேட்டையில் 2-3 விவசாயிகளிடம் மட்டுமே இதைச் செய்தோம், அடுத்த 2 வருடங்களில் இதன் வர்த்தகம் முழுமையாகக் கற்றுக்கொண்டு குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் இத்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்தோம் எனச் சவுந்திரராஜன் கூறுகிறார்.
விரிவாக்கம்
1997ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது. அப்போது மொத்த விற்றுமுதல் 7 கோடி ரூபாயாக உயர்ந்தது தனியார் நிறுவனமாக உயர் பெற்றது சுகுணா.
25 ஊழியர்களுடன் 10 மாவட்டகளுக்கு விரிவாக்கம் செய்து 2000ஆம் ஆண்டு நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் 100 கோடியை தொட்டது.
வெளி மாநிலங்கள்
இந்த வெற்றித்திட்டத்தைத் தமிழ்நாட்டைத் தாண்டி வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முடிவு செய்தோம். இதன் படி கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசத்திற்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தோம்.
விஸ்வருப வளர்ச்சி
இன்று 18 மாவட்டங்களில், 9,000 கிராமங்களில், 23,000 விவசாயிகளுடன் இணைந்து சுமார் 10 கோடி சதுரடியில் இறைச்சி கோழிகளை வளர்த்து வருகிறோம். இதனுடன் ஒரு வாரத்திற்குச் சுமார் 80 லட்ச கோழிகளை வளர்த்து வருகிறோம்.
250 கிளைகள்
இந்தியா முழுவதும் தற்போது 250 கிளை கொண்டு சுகுண சாம்ராஜியம் வர்த்தகம் செய்து வருகிறது. ஒவ்வொரு கிளையிலும் 15-20 ஊழியர்களுடன், அனைத்துக் கிளைகளும் இணையத்துடன் இணைத்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
வருமானம்
நிலையான வருமானம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்த நிலையில் அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் உதவியது.
எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த விவசாயிகளுக்கு விவசாய வருமானத்துடன் ஒவ்வொரு 45 நாட்களுக்கு வருவாம் கிடைக்கும் ஒரு வாய்ப்பை சுகுணா ஹோல்டிங்ஸ் உருவாக்கியுள்ளது.
இயற்கை உரம்
மேலும் கோழி வளர்ப்பில் இருக்கும் கிடைக்கும் கழிவுகள் விவசாயத்திற்குப் பயன்படுவதால் விவசாயிகளுக்கு உரம் வாங்கும் செலவுகளிலும் கணிசமான பணம் மிச்சப்படுத்த முடிகிறது.
18 சதவீத சந்தை
இந்தியாவின் கோழி வளர்ப்பு மற்றும் அதன் வர்த்தகச் சந்தையில் சுகுணா புட்ஸ் சுமார் 18 சதவீத சந்தையைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.
நேரடி விற்பனை
இதோடு நேரடி விற்பனையில் இறங்க திட்டமிட்ட சுகுணா புட்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கோழி இறைச்சியை விற்கும் சுமார் 250 விற்பனை கிளைகளை வைத்துள்ளது.
பங்களாதேஷ்
தற்போது சுகுணா தனது புதிய கிளை நிறுவனத்தைப் பங்களாதேஷ் நாட்டில் துவங்கியுள்ளது. ஏற்கனவே சுகுணா நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கு இறைச்சி கோழிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
இப்பகுதிக்கு ஏற்றுமதி செய்யும் இறைச்சி கோழியின் மதிப்பு மட்டும் 100 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்
சவுந்திரராஜன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார், இவரது மனைவி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். இவரது மகன் பி.காம் படித்துவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவன பணியில் சேர்ந்தார். இவரது மகளுக்குத் திருமணம் ஆகியது.