ஓய்வூதிய நிதி அமைப்பான வருங்கால வைப்பு நிதி ஆணையம் 4.5 கோடி ஈபிஎப் சந்தாதார்கள் பயனடையும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட பிஎப் கணக்கு வைத்து இருந்தால் தற்போதைய யூஏஎன் எண்ணுடன் இணைக்கும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியின் மூலமாக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள 10 முந்தைய ஈபிஎப் கணக்குகளை எளிதாக ஒரே யூஏஎன் எண்ணில் இணைக்க முடியும்.
இணையதளம் மூலமாக எளிதாகப் பிஎ பணத்தினைப் பெறுவது எப்படி?
தற்போது ஈபிஎப்ஓ சந்தாதார்கள் பிஎ பணத்தினை எளிதாக யூஏஎன் இணையதளம் மூலமாக எளிதாகக் கோரிக்கை வைத்துப் பெற முடியும். ஆனால் இந்த வசதியினைப் பயன்படுத்த இவர்கள் யூஏஎன் எண்ணை செயல்படுத்த வேண்டும். பின்னர் ஆதார் மற்றும் பான் எண்ணை யூஏஎன் கணக்குடன் இணைக்க வேண்டும்.
யூஏஎன் எண்ணைச் செயல்படுத்தாத ஈபிஎப் சந்தாதார்களும் இணையதளம் மூலமாகப் பிஎ பணத்தினைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையினை வைக்க முடியும்.
ஒரு ஊழியருக்கு ஒரு ஈபிஎப் கணக்கு
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆனது ஒரு ஊழியருக்கு ஒரு ஈபிஎப் கணக்கு என்ற முறையினை எளிமைப் படுத்தி வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
வருங்கால வைப்பு நிதி ஆணையமானது தனது 120 கிளை அலுவலர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து புதிய வசதி உதவியுடன் ஒரே கணக்காக இணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஈபிஎப் சந்தாதார்கள் அளிக்க வேண்டிய விவரங்கள்
ஈபிஎப் சந்தாதார்களும் நடப்புச் செயல்பாட்டில் உள்ள யூஏன் எண், உறுப்பினர் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை யூஏஎன் இணையதளத்தில் அளிக்க வேண்டும்.
ஈபிஎப் சந்தாதாரின் விவரங்களைச் சரிபார்த்த பிறகு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையமானது முந்தைய பிஎப் கணக்கு விவரங்களை எல்லாம் நடப்பு யூஏஎன் எண்ணுடன் இணைக்க உதவும்.
புதிய சேவை எங்குக் கிடைக்கும்?
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இந்தப் புதிய வசதியினை www.epfindia.com அல்லது unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தின் உள்ள ஊழியர்கள் பகுதி ('Employees' Corner) மூலமாக அளிக்கிறது.