இந்தியாவில் வயது வரம்பு வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகளவில் வளர்ந்துள்ளது. இதில் வரும் செய்திகளும் உண்மையென நம்பும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த 3 நாட்களில் பெரிய அளவில் வெடித்த ஒரு செய்திதான், இது "இந்தச் சுனாமி, வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை முழுமையாகத் துடைந்து எடுத்துவிடும்" என FRDI மசோதா குறித்துச் செய்திகள் சமுக வலைத்தளங்களில் பரவியது.
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்ன..?
இந்திய வங்கிகள்
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளில் தற்போது வராக்கடன் அளவு கழுத்தை நெறிக்கும் அளவிற்கு அடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுள்ள பல நிறுவனங்கள் தற்போது வர்த்தகம் இல்லாமல் திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காரணத்தால், வங்கிகளுக்குத் தவணை தொகை கூடச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
ரிசர்வ் வங்கி
இதனால் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ஆபத்தில் இருக்கும் கடன் கணக்குகள் அதாவது கடன் தொகையைப் பெற்றுத் திருப்பி முடியாத சூழ்நிலையில் இருக்கும் நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நிறுவனங்களின் சொத்துகளை விற்றுக் கடனை தீர்க்க முடியும்.
வங்கி திவால்
இது ஒருபுறம் இருக்க, நாட்டின் முன்னணி வங்கிகள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்துத் திரும்பப் பெற முடியாமல் உள்ளது. இதனால் சில வங்கிகளே திவால் ஆகும் நிலையில் உள்ளது.
2வது இடம்
உலகிலேயே அதிகளவிலான வராக் கடன் வைத்துள்ள வங்கி அமைப்புகளில் இந்திய வங்கிகள் 2வது இடத்தில் உள்ளது. இதே நிலையைத் தொடர்ந்தால் அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு நடந்த நிதி நெருக்கடி இந்தியாவிலும் உருவாகும்.
அமெரிக்க வல்லரசு நாடாக இருக்கும் பட்சத்திலேயே இதில் இருந்து மீண்டு வர 3 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவைப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் மீள்வது மிகவும் கடினம் என்பது மட்டும் அல்லாலம மீண்டு வராமல் கூடப் போகலாம்.
FRDI மசோதா
இத்தகைய சூழ்நிலையில் வங்கிகளில் இருக்கும் மக்களின் வைப்பு நிதிகளைக் காப்பாற்றவும், வங்கிகளைக் காப்பாற்றவும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டு வந்தது தான் Financial Resolution and Deposit Insurance Bill, 2017 என்னும் FRDI மசோதா.
அமைப்பு
இந்த மசோதாவில் முக்கியமான ஒன்றாக ஒரு அமைப்பை நிறுவி, திவாலாகும் சூழ்நிலையில் உள்ள வங்கிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து தப்பிக்க நடவடிக்கையை எடுக்க ஒரு பிரத்தியேக அமைப்பை உருவாக்குவது.
இதை அமைப்பதன் மூலம் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் பெரிய மோதல் கூட உருவாகலாம்.
வைப்பு நிதி
மேலும் ரிசர்வ் வங்கி 1971ஆம் ஆண்டு அமைத்த Deposit Insurance and Credit Guarantee Corporation மூலம் வங்கிகளில் 1 லட்சம் வரையிலான வங்கி வைப்பு நிதிக்கு காப்புறுதியை அளித்துள்ளது, இதனையும் மாற்ற வேண்டும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயன்படுத்துதல்..
2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பின், திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதிகளைப் பயன்படுத்திப் பிரச்சனையில் இருந்து வெளியேற வழியை உலக நாடுகளில் இருக்கும் வங்கிகள் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் டெபாசிட் செய்தவர்களுக்கு வைப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே கிடைத்தது.
இல்லை.. இல்லை..
வங்கியில் ஒருவர் எவ்வளவு வைப்புச் செய்தாலும் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்புறுதி கிடைக்கும், மீதமுள்ள தொகைக்குக் காப்புறுதி இல்லை என்பதைத் தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த மசோதாவில் இந்த வைப்பு நிதியில் அரசு மற்றும் வங்கியின் தலையீடுகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ள மத்திய அரசு. அதன் அளவீட்டைக் குறிப்பிடவில்லை.
1 லட்சம் ரூபாய்
மேலும் மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில் காப்புறுதி பெற்ற வைப்பு நிதி மற்றும் இதர முதலீட்டுத் திட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என அறிவித்துள்ளது.
இதுதான் காரணம்
இப்புதிய மாற்றத்தில் 1 லட்ச ரூபாய்க்கான காப்புறுதி அளவு குறைக்கப்படுமா..? அதிகரிக்கப்படுமா..? அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா..? என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதுவே இன்றைய பிரச்சனைக்கு முக்கியக் காரணம்
மோடி அரசு..
ஒவ்வொரு முறையும் மோடி அரசு திட்டங்களை அறிவிக்கும் போது பல குளறுபடிகள் இருக்கும், இதற்குச் சரியான உதாரணம் என்றால் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு நடந்த ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொடர் மாற்றங்களை நிதியமைச்சகம் அறிவித்ததை நாம் மறந்திருக்க முடியாது.
இதேபோல் இந்த முறையும் மசோதாவில் அளவீடுகளைக் குறிப்பிடாமல் மக்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியது.
மக்கள் அவதி..
மோடி அரசு எப்போது என்ன செய்யும் என்று பதற்றத்தில் இருக்கும் மக்கள், இந்தச் செய்தி வெளியானதில் இருந்து வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர்.
திங்கட்கிழமைகளில் நடக்கும் சராசரி பரிமாற்றங்களை எண்ணிக்கையை விடவும் இன்று அதிகமான பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.