இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ ஒரு காலாண்டின் லாபத்தினை விட அதிகமாக மினிமம் பேலன்ஸ் அபராத தொகையினை வசூலித்துள்ளது என்று செய்திகள் வெளியானதை அடுத்து அதிரடி முடிவை எடுக்க உள்ளது.
இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்புக் கணக்குகளில் தற்போது உள்ள மினிமம் பேலன்ஸ வரம்பினை மேலும் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் எஸ்பிஐ வங்கி மெட்ரோ நகரங்களில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்கில் வைத்து இருக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அபராதம் விதித்தும் வந்தது.
செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட மறு பரிசீலனை
எனினும் இது பொதுமக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதை அடுத்து செப்டம்பர் மாதம் மெட்ரோ நகரங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்றும், புற நகர் மற்றும் சிறு நகர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்றும் 1,000 ரூபாய் கிராமப்புற வங்கி கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனக் குறைத்தது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிப்பிற்கான காரணம்
மத்திய அரசு ஜன் தன் போன்று பூஜ்ஜியம் இருப்புத் தொகை வைத்துக்கொள்ளக் கூடிய சேமிப்பு கணக்குத் திட்டங்களை அறிமுகம் செய்ததை அடுத்து அதிகமான சேமிப்பு கணக்குள் திறக்கப்பட்டதால் அந்தக் கணக்குகளினை நிர்வகிக்கும் செலவானது அதிகரித்து வருகிறது என்றும் அதனால் தான் பிற சேமிப்புக் கணக்குகள் மீது அபராதம் விதிக்கும் நிலைக்கு வங்கி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதகத் தெரிவித்துள்ளனர்.
5 வருடம் இல்லை
குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பானது 2016-ம் ஆண்டுக்கு முன்பு 5 வருடமாக விதிக்கப்படவில்லை. ஆனால் பூஜ்ஜியம் சேமிப்புக் கணக்குகள் அதிகரித்து அதனால் வங்கிகளுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டு லாபம் குறைந்ததால் தான் மீண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய முடிவு
எஸ்பிஐ வங்கி தற்போது குறைந்தபட்ச இருப்புத் தொகையினை அதிகபட்சம் 1,000 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகிறன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
வசூலிக்கப்பட்ட அபராதம்
2017-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் எஸ்பிஐ வங்கி 1,771 கோடி ரூபாயினை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்று அபராதமாக வசூலித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் எஸ்பிஐ வங்கி பெற்று காலாண்டு நிகர வருவாயான 1,581.55 கோடி ரூபாயினை விட அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை அதிகம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவுகளுடன் ஒப்பிடும் போது நிகர வருவாயாகப் பெற்ற 3,586 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதியாகும்.
எஸ்பிஐ வங்கி வசூலிக்கும் அபராதம்
எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ மற்றும் புற நகர் பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
இதுவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
பிற வங்கிகள்
பிற பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்பிஐ வங்கி குறைந்த அளவில் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைக்க வேண்டும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.