இந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உட்பட அனைத்தும், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் மார்க்கெட்டிங் செய்வதற்கும், பொருட்களுக்கு அதிகளவில் தள்ளுபடியை அறிவித்துச் செலவு செய்து வந்தது.
மார்கெட்டிங் மற்றும் தள்ளுபடிக்காகச் செலவிடும் தொகையை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மொத்த வருவாயில் கழிக்கப்பட்டுத் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே கணக்கு காட்டி வரிச் சலுகையை அடைந்து வருகிறது.
இதற்கான விளக்கத்தை வருமான வரித்துறை பிளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களின் விளக்கம் கேட்டு கணக்கீட்டு முறையை மாற்றி உரிய வரியைச் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
தோல்வி..
இந்த அறிவிப்பை அடுத்தப் பிளிப்கார்ட் நிறுவனம் வருமான வரித்துறைக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வழக்கில் தற்போது தோற்றுப்போனது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் சந்தையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரிகளில் மிகப்பெரிய மாற்றம் நிலவ உள்ளது.
டிசம்பர்
இந்த அறிவிப்பு டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பொதுச் சந்தையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
என்ன பிரச்சனை
பொதுவாகவே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மார்கெட்டிங் மற்றும் தள்ளுபடி விற்பனையில் செலவிடப்படும் தொகையை, செலவுகள் எனக் கணக்கு காட்டி மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வருமான கணக்குக் காட்டுகிறது.
இதனால் ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தில் லாபம் இல்லாமல், நஷ்டத்தை மட்டுமே காட்டி வரிச் செலுத்துவதில் இருந்து தப்பி வந்தது.
வருமான வரித்துறை
இந்நிலையில் வருமான வரித்துறை மார்கெட்டிங் மற்றும் தள்ளுபடி விற்பனையில் செலவிடப்படும் தொகையை மூலதன செலவீடு இல்லை (capital expenditure), ஆகவே அதனை வருவாயில் இருந்து கழிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்தே தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போராடி வருகிறது.
மறு கணக்கீடு
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வருமான வரித் துறை இந்தக் கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
டிசம்பர் மாதம் வருமான வரித்துறையின் அறிவிப்பை எதிர்த்து டிசம்பர் மாதம் பிளிப்கார்ட் வழக்குத் தொடுத்தது. இதன் விசாரணையில் வருமான வரித்துறை கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது.
10 வருடம்
மூலதன செலவீடு (capital expenditure) என்பது 4 வருடம் முதல் 10 வருடம் வரையிலான காலத்தை அடிப்படையில் கொண்டது குறிப்பிடத்தக்கது.
30 சதவீத வரி
இந்நிலையில் வருமான வரித்துறையின் அறிவிப்பு அமலாக்கம் செய்யப்படும் நிலையில், மார்கெட்டிங்-கிற்குச் செலவிடப்படும் தொகையை லாபமாகக் கணக்குக் கொள்ளப்படும்.
இந்தத் தொகைக்குப் பிளிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்குப் பாதிப்பு..
வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை விடவும், இனி வாடிக்கையாளர்களுக்கு அதிகத் தள்ளுபடிகளை வழங்காது என்பது வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.
உதாரணம்
இப்போது பிளிப்கார்ட் மார்கெட்டிங் மற்றும் தள்ளுபடியில் ஒரு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது இந்த 100 கோடியும் வருவாய் கழிக்கப்பட்டு வரிச் சலுகையைப் பெறும், ஆனால் புதிய அறிவிப்பு அமலாக்கம் செய்யப்படும் நிலையில் 100 கோடி ரூபாய் மூலதன செலவீடு (capital expenditure) தொகையாக 10 வருடத்திற்குப் பங்கீட்டு ஒவ்வொரு வருடமும் 10 கோடி ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை பெற இயலும்.
இதனால் மீதமுள்ள தொகை லாபமாகக் காட்டவேண்டிய கட்டாயத்தில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உள்ளது, இதற்கு 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.
மக்களின் நிலை
இத்தகைய சூழ்நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான தள்ளுபடியை அறிவிப்பது இனி நடக்காத காரியமாக உள்ளது.
யாருக்கு லாபம்..?
ஈகாமர்ஸ் நிறுவனங்களின் அதீத தள்ளுபடியால் வர்த்தகத்தை இழந்து தவிக்கும் ஆஸ்தான கடைக்காரர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பெரிதும் பயன்படுவார்கள்.
இதனால் மக்கள் மீண்டும் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடும் சூழ்நிலையும் உருவாகும்.
போட்டி
ஆனால் இந்தியா ஈகாமர்ஸ் சந்தையில் தற்போது போட்டி மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் தள்ளுபடிகளைக் கைவிடாமல் மாற்று வழியை யோசிக்கும் என்றும் கருத்து நிலவுகிறது.