தெருவில் இறங்கிக் கொள்ளையடித்த காலம் போய் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே திருடும் வகையில் இணையவழி குற்றங்கள் பெருகிவிட்டன. உலகம் முழுவதும் மோசடியாளர்களும் ஹேக்கர்களும் பல்வேறு வைரஸ்கள் மற்றும் தந்திர வழிகளில் நிறுவனங்கள் மற்றும் தனிமனித ரகசியங்களைக் களவாட படையெடுத்துக் கிளம்பிவிட்டார்கள். இவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?
கடந்த வருடம் நடந்த இணைய மோசடிகளின் தொகுப்பு இதோ...
வான்னஃகிரை ரேண்சம்வேர் (WannaCry Ransomware)
பெயருக்கு ஏற்றாற்போல் , இணைய உலகில் பேரழிவை ஏற்படுத்தி 150 நாடுகளைக் கதறி அழ வைத்த வைரஸ் இது. அப்பாவி போல இருக்கும் குழந்தை நாம் தொட்டவுடன் அழுவது போல ஈமெயிலில் வரும் ஜிப் பைலை திறந்தாலே நம்மை அழ வைக்கும். ஆம், நம் தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுப் பணம் கொடுத்த பின்பு தான் விடுவிக்கப்படும்.
நம் தகவல்களைக் காப்பது எப்படி?
இது UK-ன் NHS, அமெரிக்காவின் பெட் எக்ஸ், ஜெர்மனியின் ரயில் சிஸ்டம் போன்ற பெரும் நிறுவனங்களைத் தாக்கி அவற்றின் சேவைகளை முடக்கியது. காரணம் அப்டேட் செய்யப்படாத விண்டோஸ் கணினிகள் தான். ஆகவே முழுவதும் அப்டேட் செய்த மென்பொருள், கணினிகளால் வான்னஃகிரை வைரஸை தடுக்கலாம்.
மின்னஞ்சல் மோசடிகள் (Business Email compromise scams) :
பணிபுரியும் இடங்களில் இவ்வகை மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். மோசடியாளர்கள், உங்கள் மேலதிகாரி பெயரில் மின்னஞ்சல் அனுப்பி நிறுவனத்தின ரகசியங்கள் அல்லது பணத்தைத் திருட முயல்வர்.
தடுப்பது எப்படி?
இதில் ஹேக்கர்கள் உங்கள் கணினிக்குள் ஊடுருவி ஈமெயிலை ஹேக் செய்யவும் வாய்ப்புள்ளது. இவற்றைத் தடுக்க, ஒரு பொறுப்பான பணியாளராக உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். இது போன்ற மோசடியான ஈமெயிலில் கவனமாக இருங்கள்.
பைனரி முதலீடுகள் (Binary options investment scams):
இந்த வகைச் சூதாட்டம் தான் பழங்காலத்திலிருந்து மோசடிகளுக்கு எல்லாம் ராஜா. சூதாட்டத்தின் முடிவு 'ஆம்' என்றால் நம் பணம் நமக்குக் கிடைக்கும். 'இல்லை'யென்றால் அம்போ தான். ஐரோப்பியா போன்ற நாடுகளில் இணையதளங்களில் பரவலாகக் காணப்படுகிறது.
சூதானமாக இருப்பது எப்படி?
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரங்களைப் பார்த்து மோசடி ஏஜண்டுகள், நிறுவனங்களால் ஏமாந்தவர்கள் அதிகம். முறைப்படுத்தப்பட்ட சூதாட்டங்கள், அரசால் அங்கீகரிப்பட்ட தளங்கள் என்றால் முதலீடு வீடு வந்து சேரும்.
டிரைடெக்ஸ் பேங்கிங் வைரஸ் (Dridex Banking trojan):
கடந்த சிலவருடங்களாக இந்த வைரஸ்கள் இருந்தாலும், இன்னமும் கணினிகளைத் தாக்கி பணம், முதலீடு சம்பந்தப்பட்ட தகவல்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. சத்தமே இல்லாமல் வேர்டு , எக்சல் வடிவில் கணினியை தாக்குபவை இவை.
சமாளிப்பது எப்படி?
தனிமனித, வியாபார நிறுவன கணினிகளைத் தாக்கும் இவ்வகைப் பைல்கள் பிரிண்டர், ஸ்கேனர் வழியே வரக்கூடும். எனவே, உறுதிப்படுத்தப்பட்ட பைல்களை டவுன்லோடு செய்வது நல்லது.
ஃபேக் ஆப்பிள் மெயில் (Fake Apple phishing emails) :
உங்ககிட்ட ஈமெயில் அக்கவுண்ட் இருக்க? அப்படியென்றால் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு வரும் ஆப்பிள் ஈமெயில்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்கள் ஸ்பேம் /ஜங்க் மெயிலில் இருக்கும். சமீபத்திய ஆய்வுகளின்படி, 4 ல் 1 மோசடி ஈமெயில், ஆப்பிள் மெயில் தான்.
மோசடி ஈமெயிலை கண்டறிவது எப்படி?
ஆப்பிள் நிறுவனம் எப்போதும் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்காது. மேலும் இந்தப் போலி ஈமெயில்களை அதன் முகவரி மற்றும் தப்பும் தவறுமான ஆங்கிலத்தை வைத்தே கண்டறியலாம்.
போலி கல்விகடன் ஈமெயில் (Fake student loans phishing emails) :
இந்த மோசடியான மின்னஞ்சல்கள் பட்டதாரிகளைக் குறிவைத்து அனுப்பப்படுகின்றன. உண்மையான நிறுவனங்களின் முத்திரை, ஈமெயில் முகவரியைப் போலவே போலியைத் தயாரித்துப் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவார்கள்.
போலியை கண்டு ஏமாறாதீர்கள்!
போலி ஆப்பிள் மெயில்களைப் போலவே இதிலும் பல சிவப்பு நிற டேக்குகள், கேவலமான ஆங்கிலப் பிழைகள் இருக்கும்.
நீங்கள் இதுபோன்ற இணையவழி மோசடிகளைச் சந்தித்திருத்தல் உடனே சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்யுங்கள். உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் பிறருக்கு நடக்காமல் தடுக்கலாம்.