தென் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழி-ல்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் இன்று 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்கிறார் இம்மாநில முதல்வர் சித்தராமைய்யா.
2018ஆம் ஆண்டில் நடக்கும் 8 மாநில தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலை மையமாக வைத்து மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ததைப் போல், கர்நாடகா மாநிலத்திலும் ஏப்ரல்-மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால், கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா இன்று அறிவிக்கும் பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியமான திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
மேலும் சித்தராமைய்யாவின் தற்போதைய ஆட்சியில் அறிவிக்கும் கடைசிப் பட்ஜெட் அறிக்கையும் இதுதான்.
கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா தற்போது பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் துவங்கிவிட்டார்.
முக்கியமான நாள்
இன்று கர்நாடகா மாநிலத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக உள்ளது ஒரு புறம் காவிரி நதிநீர் தீர்ப்பு மறுபுறம் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை.
காவிரி நதிநீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிடத் தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடகா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்குத் திறக்க உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.
பெங்களூரு
இதில் பெங்களூருக்குக் கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்க உள்ளது. காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புபடி, பெங்களூருக்கு 19 டிஎம்சி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது கூடுதல் நீரைச் சேர்த்தால் 23.75 டிஎம்சி தண்ணீர் பெங்களூருக்குக் கிடைக்க உள்ளது.
வரவேற்பு
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் கர்நாடக முதல்வர் சித்தராமையா உச்சதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் பெங்களூரு நகரக் குடிநீர் பிரச்சனை தீரும் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களின் நிலை
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வழங்க உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் அளவை 177.25 டிஎம்சியாகச் சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
கூடுதல் ஒதுக்கீடு
அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்புக் காரணமாகத் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ஆதரவான இந்தத் தீர்ப்பை கர்நாடக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பட்ஜெட் அறிக்கை
சரியாக 11.45 மணிக்குப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்கினார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. இவர் இம்மாநிலத்தின் நிதியமைச்சராகவும் இருக்கும் காரணத்தால் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
வேலைவாய்ப்பு
இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சித்தராமையா தெரிவித்தார்.
வளர்ச்சி
2016-17ஆம் நிதியாண்டில் கர்நாடகா மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சம்பளம்
6வது சம்பள கமிஷன்-படி கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு அளித்துள்ளதாகக் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறினார்.
இதன் மூலம் இம்மாநில அரசுக்கு 10,508 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிக்குப் பென்ஷன் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சித்தராமையா அறிவித்தார்.
கடன் தள்ளுபடி
டிசம்பர் 31,2017இன் வரையிலான காலத்திற்குக் கால்நடை வளர்ப்புக்காகக் கடன் பெற்றவர்களுக்கு 50,000 ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்ட உள்ளதாகச் சித்தராமையா அறிவித்தார்.
விவசாயிகள் நலன்
Raita Belaku scheme திட்டத்தின் கீழ் வறண்ட நிலம் கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வந்து சேர்க்கப்படும்.
அதேபோல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் அளவிலான நிதியுதவியை அறிவித்துள்ளார் சித்தராமையா.
விவசாயக் கல்லூரி
மேலும் விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக விவசாயக் கல்லூரியை சாம்ராஜ் நகரில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் புதிய ஆராய்ச்சி மையத்தை முடிபிஹால் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் Nanjundaswamy Study சென்டரை GKVK கேம்பஸ்-இல் துவங்க உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
கடந்த வருடம் விவசாயத் துறைக்கு 5,080 கோடி ரூபாய் அளவிலான நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 5,849 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் விவசாயம் பணிகளில் ஈடுபட்டவர்கள் பாம்பு கடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடு வளர்ப்பு
செம்மறி ஆடு/ ஆடு வளர்ப்பு துறைக்கு மட்டும் சுமார் 65.5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
40 ஏக்கர் நிலம்
பட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் வளர்ச்சிக்காகச் சுமார் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டு உற்பத்தித் துறைக்குக் கடந்த வருடம் வெறும் 28 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் இதன் அளவை 457 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.