மும்பை: இந்திய டெலிகாம் துறை சென்ற ஆண்டு மிகப் பெரிய மோசமான நிலையினை எதிர்கொண்டது. அதன் தாக்கமாக 2018-ம் ஆண்டு 30 முதல் 40 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்பது எட்டக்கனியாகியிருப்பது வேதனைக்குறியது.
டெலிகாம் மற்றும் டவர் நிறுவனங்களில் பணி நீக்கம் ஒரு பக்கம் உள்ள நிலையில் வருவாய் மற்றும் செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருவதால் ஊழியர்களின் சம்பள உயர்வு மட்டும் இல்லாமல் போனஸிலும் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாடு முழுவதிலும் குறைந்தது 2 லட்சம் ஊழியர்கள் பாதிப்படைவார்கள்.
வேலை இழப்பு
டெலிகாம் துறையில் பலர் ஏற்கனவே வேலை இழந்துள்ளதால் ஊழியர்களின் நிலை மோசம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகம் சம்பள உயர்வு மற்றும் போனஸ் பெறும் ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு சேவையினைத் தொடர்வஏ விரும்புகின்றனர். குறைந்த வேலை வாய்ப்புகள் மட்டுமே உள்ள நிலையில் அதிகப்படியான நபர்கள் அனுபவத்துடன் வேலை இல்லாமல் இருப்பதால் சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை டெலிகாம் நிறுவனங்கள் குறைத்துள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ
2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வணிக ரீதியாக இலவச தொலைத்தொடர்பு சேவையினை 4 மாதங்கள் வரை தொடர்ந்து அளித்ததினால் போட்டி நிறுவனங்களின் மோசமான நிலைக்குச் சென்று பலர் வேலை இழந்துள்ளனர்.
தொலைத்தொடர்பு துறை
சென்ற ஒரு ஆண்டில் தொலைத்தொடர்பு துறை மோசமான நிலையில் உள்ளது, 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை, இது ஒரு சிறிய தாக்கம் மட்டுமே, இன்னும் நிறையப் பிரச்சனைகளை டெலிக்காம் நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குனர் ராஜன் மேத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம்
சிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் ஊழியர்களுக்கு மீண்டும் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஜிடிஎல் இன்ஃப்ரா
இன்ப்ரா நிறுவனம் பராமர்ப்பு, பாதுகாப்பு, உற்பத்தி வளர்ச்சி என அனைத்துப் பணிகளிலும் செயல்பாட்டுச் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் அனைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மனிதவள அதிகாரி
முக்கிய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் மூத்த மனிதவள அதிகாரி ஒருவர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைப்பது கடினம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார். அதிலும் தங்களுக்குக் கண்டிப்பாகத் தேவை எனக் கருதப்படும் ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயர்வும், சிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு 9 சதவீதம் வரை ஊதிய உயர்வும் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனிதவள நிறுவனங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் 8 முக்கிய மனிதவள நிறுவனங்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் தகவலை பகிர்ந்துகொண்ட போது முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸ் தொகையில் 40 முதல் 50 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
விலை போர்
டெலிகாம் நிறுவனங்கள் இடையிலான விலை போர், இணைவுகள், விற்பனை, போன்ற காரணங்களால் டவர் சேவை வழங்கும் நிறுவனங்களில் கடந்த 16 மாதத்தில் குறைந்தது ஒரு லட்சம் நபர்களுக்காக வேலை வாய்ப்புப் பறிபோயிருக்கும்.
சம்பள உயர்வு
ஜிடிஎல் நிறுவனம் சிறந்த செயல் திறன் படைத்த ஊழியர்களுக்கு 5 முதல் 9 சதவீதம் வரை அளிக்கும் என்று கூறியுள்ள நிலையில் ஏர்டெல், ஐடியா, அமெர்க்கன் டவர் கார்ப், வோடாபோன், இண்டஸ் டவர்ஸ் மற்றும் பார்தி இன்ப்ராடெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.