மொபைல் போன் வழியாகப் பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் நிறுவனமாகப் பேடிஎம் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா விற்பனையகங்கள் மற்றும் அனைத்து வகையான நிதிசார் நடவடிக்கைகளிலும் பேடிஎம் பயன்பாட்டினை அதிகப்படுத்துவதற்குச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
விஜய்சேகர் சர்மா தொடங்கிய ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பேடிஎம், தற்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தக் காத்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட், பொதுக்காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வங்கியோடு தொடர்புடைய பிற சேவைகளையும் அறிமுகப்படுத்த பேடிஎம் நிறுவனம் தயாராக இருக்கிறது.
எல்லாம் சரி. பேடிஎம் திடீரென மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கால்பதிக்க என்ன காரணம் ?
முதலீடுகள் மேலாண்மை வணிகம்
"பணம் செலுத்துதல் மற்றும் வங்கிச்சேவைகளுக்குப் பிறகு பேடிஎம் தடம் பதிக்கக் காத்திருப்பது முதலீடுகள் மேலாண்மை வணிகத்தில்" என்று அறிவித்திருக்கிறார் பேடிஎம் மணி நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரவீன் ஜாதவ்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
ஏப்ரல் மாத இறுதிக்குள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வணிகத்தைத் தொடங்க இருக்கிறது பேடிஎம் நிறுவனம். இதற்காக, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பேடிஎம் மணி என்னும் புதிய முதலீடு அல்லது செல்வ மேலாண்மைத் நிறுவனத்தைத் டிஜிட்டல் நுட்பத்துடன் தொடங்குகிறது. இதற்காகப் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆலோசனை
நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை வழங்குவதற்காக, இத்துறையில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சொத்து மேலாண்மை நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கிவிட்டது பேடிஎம்.
முதற்கட்டம்
முதல் கட்டமாக, 12 முதல் 15 சதவீத வரையிலான லாபம் அளிக்கும் பெரும் நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களைத் தன்னுடைய புதிய செயலியின் மூலம் வழங்கவிருக்கிறது பேடிஎம். ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறுவனங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தக் காத்திருக்கிறது.
வழக்கமான திட்டங்களைக் காட்டிலும் அதிக லாபம்
"குறைந்த செலவு விகிதம் மற்றும் மறைமுகமான கழிவுத் தொகை எதுவும் இல்லாமல், வழக்கமான திட்டங்களைக் காட்டிலும் 1.5 சதவிகித இலாபம் தரக்கூடிய வகையில் நேரடியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே பேடிஎம் மணி நிறுவனம் வழங்கும்" எனக் கூறும் பிரவின் ஜாதவ், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
பேடிஎம் முடிவு எப்படிப் பட்டது?
இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) மீது ஈா்ப்புக் குவிந்திருக்கும் இச்சூழலில், தன்னுடைய புதிய செயலியின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தில் கால்பதிக்க நினைக்கும் பேடிஎம்மின் திட்டமிடல் அபாரமானதாகவே இருக்கும்.
கணக்கெடுப்பு
"முக்கியமான நகரங்களைத் தவிர, பிற இடங்களில் உள்ள முதலீட்டாளர்களில் 28 சதவிகிதத்தினர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்கிறது, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு நிறுவன சங்கத்தின் கணக்கெடுப்பு.
பேடிஎம்-ன் திட்டம்
எனவே, மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் மீதான முதலீடுகளைப் பெருக்கப் பேடிஎம் திட்டமிட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்
"மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தற்போது 15 மில்லியன் முதலீட்டாளர்கள் உள்ளனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. 300 மில்லியனுக்கும் மேலான பேடிஎம் பயன்பாட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் போன்ற செல்வ மேலாண்மைத் திட்டங்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறோம்." எனத் தங்களுடைய நோக்கத்தைத் தெரிவிக்கிறார் பேடிஎம் மணி நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவின் ஜாதவ்.