கடந்த சில வாரங்களாகத் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகவே கிடைக்கிறது, அப்படிப் பணம் நிரப்பினாலும் மக்கள் உடனடியாகப் பணத்தை எடுத்து வந்தனர். மக்களின் இந்தச் செயலுக்குப் பலரும் வெவ்வேறான கருத்துக்களைக் கூறி வந்த நிலையில்..
தற்போது இதேபோன்ற நிலைமை மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலவுகிறது. இத்தகைய நிலை பலருக்கும் 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவூட்டுவதாக உள்ளது.
100 ரூபாய் மட்டுமே..
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதற்கு முன்பு வங்கி ஏடிஎம்களில் 100 ரூபாய் மட்டுமே கிடைத்தது 500 மற்றும் 1000 ரூபாய் கிடைக்கவில்லை எனப் பலரும் கூறியதை நாம் மறக்க முடியாது. ஆதேபோல் இப்போது இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான புழக்கம் இல்லாமல் இருப்பது நம்மால் உணர முடிகிறது.
பெரு நகரங்கள்
தற்போதைய நிலையில் பெரும் நகரங்களில் மட்டுமே 2000 ரூபாய் காணப்படுவதாகவும், கிராமம், டவுன் பகுதிகளில் 500 மற்றும் 100 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை மக்கள் உணர்ந்ததன் வாயிலாகவே தெலுங்கானா, ஆந்திர மாநிலங்கள் ஏடிஎம்களை மக்கள் காலி செய்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில் பயம்..
நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதாவான எப்ஆர்டிஐ 2017இல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது அமலுக்கு வந்தால் வங்கிகளில் இருக்கும் மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை எனச் செய்தி மக்கள் மத்தியில் தீயாகப் பரவிய காரணத்தால், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருக்கும் ஏடிஎம்களில் மக்கள் பணத்தைத் தேவைக்கும் அதிகமான அளவிற்கு எடுத்து வருகின்றனர்.
எப்ஆர்டிஐ மசோதா
இந்த மசோதா குறித்து மக்களின் பணத்திற்கு எவ்விதமான ஆபத்துமில்லை என மத்திய அரசு பல முறை விளக்கியும், மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
வங்கி மோசடிகள்
இதற்கு ஏற்றார் போல் வங்கிகளில் நாள்தோறும் ஒரு மோசடி வெளிவந்த வண்ணம் உள்ளது, இதனால் வங்கிகளின் வராக்கடன் அளவு தாறுமாறாக உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சுக்குள்ளாக்கியுள்ளது.
அதிகளவிலான வராக்கடன் இருக்கும் காரணத்தால் சில வங்கிகள் திவாலாகக் கூடும் என்றும் மக்கள் மக்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்ற செய்திகளை மக்களால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்.
வங்கிகளுக்குப் படையெடுப்பு
இதன் எதிரொலியாகத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், தொடர் மோசடிகளால் வங்கி திவாலாகி விடும் என்ற அச்சத்தில் மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம்களுக்குச் சென்று வங்கி கணக்கில் இருக்கும் பணத்தைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக வங்கிகளிடம் இருக்கும் பண இருப்பு குறைந்து செயல்படாமல் முடங்கக் கூடும்.
ஏடிஎம்
ஒருவர் ஒரு நாளுக்கு 20,000 முதல் 40,000 ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் எடுக்கும் காரணத்தால் ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, இரு மாநிலங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமம், டவுன்களில் ஏடிஎம்கள் பணமில்லாமல் முடங்கியுள்ளது.
இத்தகைய நிலை தான் தற்போது தெலுங்கான, ஆந்திர பிரதேசம் மாநிலங்களைத் தாண்டி மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் மாநிலங்கிகளிலும் நடந்து வருகிறது.
2000 ரூபாய் நோட்டு
ஏப்.6 ஆம் தேதியின் படி இந்திய சந்தையில் 18.17 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
5 மாநிலங்களில் வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலைக்கு மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டைச் செல்லாது என அறிவிக்கும் என்று மக்கள் அச்சத்தில் இருப்பதே முக்கியமான காரணமாகவும் இருப்பதாகத் தெரிகிறது.
வைப்பு
மக்கள் மத்தியில் பணத் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் வங்கிகள் வைப்பு நிதியின் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வங்கி வைப்பு நிதி 6.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 15.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இருந்தது.
சிவ்ராஜ் சிங் சவுகான்
ஏற்கனவே மக்கள் மோடி என்ன செய்யுமோ என்ற பயத்தில் இருக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், 2000 ரூபாய் நோட்டுகள் யாரிடம் இருக்கத் தெரியுமா. தற்போது ஏற்பட்டுள்ள பணதட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமே இதுதான்.
மாநில அரசு இதை எதிர்த்துக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.
சிவ்ராஜ் சிங் சவுகான் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
பயப்பட வேண்டாம்
இந்நிலையில் மத்திய அரசு இதுகுறித்து வங்கி மற்றும் ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து பணத் தட்டுப்பாட்டைக் குறைக்கவும் பணியைச் செய்து வருவதாகவும், இதனால் இதுகுறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என அறிவித்துள்ளது.
3 நாட்கள்
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், புழக்கத்தில் போதிய அளவிலான பணம் இருக்கிறது, அதேபோல் வங்கிகளிலும் பணத் தட்டுப்பாடு என்னும் நிலை இல்லை. திடீர் மற்றும் அதிகப் பணத் தேவையின் காரணமாகவே தற்போது செயற்கையான பணத்தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
1.25 லட்சம் கோடி
தற்போது சந்தையில் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணம் புழக்கத்தில் உள்ளது, ஆனால் சில மாநிலங்களில் அளவிற்கு அதிகமாகவும், சில மாநிலங்களில் தேவைக்குக் குறைவாகவும் பணம் இருக்கும் காரணத்தினாலேயே இந்த மாறுபட்ட சூழ்நிலை நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு 3 நாளில் தீர்வு காணப்படும் என நிதித்துறை உறுப்பினர் எஸ்பி ஷுக்லா தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டு வெளியேற்றப்படும்..
சிவ்ராஜ் சிங் சவுகான் சில முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் பணமதிப்பிழப்பு குறித்து அவர் முழுமையாகத் தெரிந்துகொண்டாரா என்று கேள்வி எழுகிறது.
எஸ்பிஐ விளக்கம்
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் நாட்டின் நிலவும் பணப்புழக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவை கட்டுப்படுத்தவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
இந்த அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் படிப்படியாக 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடவும், அதை விநியோகம் செய்யவும் நிறுத்தியுள்ளதாக எஸ்பிஐ வங்கியின் டிசம்பர் மாத ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.