பெங்களூரு: வங்கி ஏடிஎம், டெபிட்/கிரெடிட் கார்டு பின் எண்ணைப் பிறருடன் பகிரக் கூடாது என்று வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில் பலர் அதனைப் பின்பற்றுவது என்பதே கிடையாது. எஸ்பிஐ வங்கி விதிகளில் கார்டு பயன்படுத்தும் நபரினை விட வேறு யாரும் அந்தக் கார்டினை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது.
பெங்களூருவில் மகப்பேறு விடுமுறையில் இருந்த வந்தனா அவரது கணவரிடம் கார்டினை கொடுத்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பணம் எடுத்து வர கூறியிருக்கிறார்.
ஏடிஎம்-ல் பணம் எடுத்த கணவர்
வந்தானாவின் கணவர் ராஜேஷ் மனைவியின் டெபிட் கார்டினை கொண்டு சென்று எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 25,000 ரூபாய் பணம் எடுக்க முயன்ற போது பணம் வராமல், பணம் எடுக்கப்பட்டதற்கான ரசீது மட்டும் வந்துள்ளது.
பணம் வரவில்லை
பணம் மட்டும் வரவேயில்லை. உடனே அருகில் இருந்த மற்றொரு ஏடிஎம் மையத்தில் இருப்புத் தொகையினைச் சரிபார்த்த போது 25,000 ரூபாய் பணம் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக மட்டும் காண்பித்துள்ளது.
புகார்
உடனே புகாரினை வாடிக்கையாளர் சேவை மையத்திற்குத் தகவல் அளித்த போது ஏடிஎம் மையம் பழுதடைந்து உள்ளதாகவும் 24 மணி நேரத்தில் வங்கி கணக்கிற்குப் பணம் திரும்பி வந்துவிடும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு பணம் வங்கி கணக்கிற்குத் திரும்பவேயில்லை.
வங்கி கிளை
ராஜேஷ் என்ன செய்வது என்று புரியாமல் இந்துஸ்தான் ஏரோனட்டிக்கல் லிமிட்டட் எஸ்பிஐ வங்கி கிளைக்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் பணம் சரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது, வாடிக்கையாளர் அதனைப் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளனர்.
சிசிடிவி கேமரா விடியோ
பின்னர் புகாரினை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமரா விடியோக்களை ஆய்வு செய்ததில் ராஜேஷ் தான் பணத்தினை எடுத்துள்ளார், ஆனால் இயந்திரம் பணத்தினை விநியோகம் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.
விதிமுறைகள் மீறல்
அதனைப் பார்த்த வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர் புகார் அளித்த நேரத்தில் டெபிட் கார்டினை பயன்படுத்தி வந்தனா பணம் எடுக்கவில்லை என்றும் அவரது கணவர் தான் பணம் எடுத்துள்ளார். இது எஸ்பிஐ கார்டுகள் விதிகளுக்கு எதிரானது என்றும் பணத்தினைத் திரும்ப அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
ஆர்டிஐ
எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் பதிலில் திருப்தி அடையாத வந்தனா ஆர்டிஐ மூலம் ஏடிஎம் மைய பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்த போது அன்றைய தேதியில் கூடுதலாக ஏடிஎம் இயந்திரத்தில் 25,000 ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வழக்கு
ஒரு வருடமாக ஏஸ்பிஐ வங்கி மற்றும் வந்தனா இடையிலான இந்தப் போராட்டம் நீல பெங்களூரு 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார். அதில் தான் குழந்தையுடன் இருந்ததால் தன்னால் ஏடிஎம் மையத்திற்கு வர முடியவில்லை. எனவே கணவரினை பணம் எடுத்து வர கூறியதாகவும் பின் எண்ணை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அந்தப் பரிவர்த்தனை அன்று சரியாகத் தான் நடைபெற்றுள்ளது, வாடிக்கையாளர் பணம் எடுத்துள்ளார் என்று தான் எங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேலை பணம் வழங்கப்படவில்லை என்று வாடிக்கையாளர் கூறினாலும் வந்தனா தனது டெபிட் கார்டு பின் எண்ணை கணவருடன் பகிர்ந்துள்ளது தவறு. அவரது கணவர் வந்தனா கிரெடிட் கார்டினை பயன்படுத்திப் பணம் எடுத்து இருக்கக் கூடாது. இது விதிகளுக்குப் புறம்பானது எனத் தங்களது வாதத்தினை வைத்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிபதிகளும் வந்தனா டெபிட் கார்டு பின் எண்ணை அவரது கணவருடன் பகிர்ந்தது தவறு. ஒருவேலை பணம் எடுத்து வர கோரிக்கை வைத்து இருந்தாலும் செல்ப் செக் முறை பயன்படுத்திப் பணத்தினை எடுத்திருக்க வேண்டும் என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.
இது போன்ற சூழலில் பணம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
தவிர்க்க முடியாத சூழலில் ஏடிஎம் கார்டு மற்றும் பின் எண்ணை யாருடனும் கொடுக்காமல் செல்ப் செக் பயன்படுத்திப் பணம் எடுக்கலாம். இல்லை என்றால் வங்கி கணக்கில் இணை கணக்கு வைத்திருப்பவராக இருக்கும் நிலையில் இருவரும் ஒரே கணக்கிற்கு இரண்டு கார்டுகளைப் பயன்படுத்துவது நல்லது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பரிந்துரைக்கிறது.