கடந்த சில வாரங்களாகத் தமிழ் நாட்டு மக்களிடம் மிகவும் விவாதப்பொருள் ஆகி இருப்பது சென்னை - சேலம் இடையிலான 8 வழி சாலை யாருக்கானது என்பது தான். சேலம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தினால் தங்களது விளை நிலங்கள் பறிபோகும் என்றும் போராடி வரும் நிலையில் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றவை இது சேலம் உறுக்கு ஆலையினை வாங்க முயலும் ஜிண்டால் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை என்று கூறப்படுகிறது.
எனவே சேலம் உருக்கு ஆலை முதல் ஜிண்டால் வரை இதில் யாருக்கெல்லாம் லாபம், சேலம் உறுக்கு ஆலையினை ஜிண்டால் வாங்குமா போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சேலம் உருக்கு ஆலை
சேலம் உருக்கு ஆலை 1970-களில் துவங்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் முக்கிய இரும்பு, சில்வர் போருட்களை எல்லாம் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் உள்ளது.
ஜிண்டால்
ஜிண்டால் நிறுவனம் 2010-ம் ஆண்டு முதல் சேலம் உருக்கு ஆலையினை வாங்க முயன்று வருகிறது. அதன் முதற்கட்டமாகச் சேலம் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தினை வாங்கியது முக்கியமானது.
மத்திய அரசு
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமாகச் சேலம் உருக்கு ஆலை இருக்கும்பட்சத்தில் இது நலிந்த நட்டம் அளிக்கும் நிறுவனமாக உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. தற்போதைய மத்திய அரசு நட்டம் அளிக்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மையமாக்கும் கொள்கையினைக் கையில் எடுத்துள்ள நிலையில் அதில் சேலம் உறுக்கு ஆலையும் சிக்கியுள்ளது.
போட்டி போடும் நிறுவனங்கள்
சேலம் உருக்கு ஆலையினை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று ஜிண்டால் நிறுவனம் இருக்கும் உள்ள நிலையில் டாடா உட்படப் பிற நிறுவனங்களும் தங்களது ஆர்வத்தினை இதன் மீது காண்பித்துள்ளன.
ஏன் சேலம் உருக்கு ஆலையினை ஜிண்டால் வாங்க வேண்டும்?
சேலத்தில் உள்ள கஜ்ச மலைதான் ஜிண்டால் நிறுவனம் சேலம் உருக்கு ஆலையினை வாங்க முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் அதிகத் தாத்துக்கள் உள்ள மலையாகக் கஜ்ச மலை இருக்கிறது என்ற ஒரே காரணங்களுக்காகப் பிற நிறுவனங்களும் இதன் மீது கவனம் செலுத்தியுள்ளன.
சரி, சேலம் உருக்கு ஆலை நட்டத்தில் தான் இயங்குகிறதா?
சேலம் உருக்கு ஆலையின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வந்தாலும் ரயில்வே போன்ற துறைகளுக்கு அளித்து வரும் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் நிறுவனத்தில் 53,000 கோடி ரூபாய் முதலீடு செய்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் அதே நேரம் 45,000 கோடி ரூபாய் கடனில் இருக்கிறது என்றும் நடப்பு நிதி ஆண்டு முதல் லாபம் வரும் என்றும், கடன் குறையும் என்றும் நிறுவனத்தின் தலைவரான பி கே சிங் 2018 ஜூன் மாதம் 5-ம் தேதி தெரிவித்துள்ளார்.
8 வழி சாலை எதற்கு?
ஒருவேலை சேலம் உருக்கு ஆலை நிறுவனம் விற்கப்பட்டால் இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாகச் சென்னை துறைமுகம் கொண்டு சென்று ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இருக்கிறது ஜிண்டால் என்பதும், இந்தச் சாலை முதல் கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் தொலைவு குறையும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் தூத்துக்குடியில் தமிழ் நாட்டின் கனிம வலங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் சேலமும் அதே நிலைக்குத் தனியார் நிறுவனங்கள் வசம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
விவசாய நிலங்கள்
மேலே கூறிய காரணங்கள் எல்லாம் சேலம் உருக்கு ஆலையினைச் சார்ந்தது. தற்போது சென்னை டூ சேலம் வழியாகச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை 10,000 கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ளது. வேகமாகச் சாலை அமைக்க நிலம் ஆக்கிரமிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு சாலைக்காக அமட்டும் 1500 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் மற்றும் 4500 ஏக்கர் விவசாய விளை நிலங்களும் பறிபோக உள்ளன என்று பாமக தலைவரான ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் டூ சென்னை செல்ல புதிய தேசிய நெடுஞ்சாலை தேவையா?
சேலம் - சென்னை செல்ல ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் இந்தப் புதிய சாலைக்கு அவசரமாகப் பணிகள் நடைபெறக் காரணங்கள் என்ன என்று தெரியவில்லை. இந்தச் சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.
டோல் கட்டணங்கள்
சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை வந்ததால் தற்போது உள்ள 6 வழி தேசிய நெடுஞ்சாலைகளை விடக் கட்டணங்கள் இரண்டு மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் அதிகபட்சம் 1.30 மணி நேரம் முதல் 30 நிமிடம் வரையில் மட்டுமே பயண நேரம் குறையும்.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலை
சென்னை - திருச்சி செல்ல சில நேரங்களில் 10 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. எனவே இந்தச் சாலையினை விரிவு படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதனைக் கிடப்பில் போட்டு விட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதற்காக இவ்வளவு அவசரமாகச் சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சந்தேகங்களை அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
கைது நடவடிக்கைகள்?
சேலம் - சென்னை பசுமை வழி சாலை அமைக்க விவசாயிகள் போராட்டங்களைச் செய்து வரும் நிலையில் இதற்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவித்து வரும் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் போன்றவர்களைக் கைது செய்வது பெறும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
விவசாயிகளுக்குப் பயன் உள்ளதா?
விவசாய நிலங்களை அளித்து இந்தத் திட்டம் வரவிருக்கிறது என்ற நிலையில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியினை வேகமாகச் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வளர்ச்சி வாய்ப்புகள்
சேலம் - சென்னை பசுமை வழி சாலை வந்தால் சென்னைக்கு அடுத்தபடியாகப் பல நிறுவனங்கள் சேலத்திற்கு வரவும் வேலை வாய்ப்புகள் பெருகவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதி மற்றும் மாவட்டம் பெரிய பயன் படையும். எடப்பாடியாருக்கு நிரந்தரப் பெயரும் கிடைக்கும்.
சேலம் விமான நிலையம்
மறு பக்கம் சேலம் விமான நிலயத்தினை விரிவாக்கம் செய்யவும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தச் சாலையினை இவ்வளவு வேகமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.