பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலில் நிறுவனம் அதிரடியாக 50,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஹரித்வாரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பதஞ்சலி நிறுவனம் எப்எம்சிஜி துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வேகமாக வளர்ந்து வரும் ஒரு உள்நாட்டு நிறுவனமாகவும் உள்ளது.
பதஞ்சலி நிறுவனம் அன்மையில் கிம்போ செயலியினை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலியை உயர்த்துவதே இலக்கு என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது பதஞ்சலி நிறுவனத்தில் யாருக்கெல்லாம் வேலைக் கிடைக்கும் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
வேலைவாய்ப்புகள்
பதஞ்சலி நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 40 முதல் 50 நபர்கள் வரை விற்பனையாளர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. இந்த விற்பனையாளர்கள் பதஞ்சலி நிறுவனத்தின் கோதுமை, அரிசி, அரிசி, எண்ணெய், பிஸ்கட், அழகு சாதனம்,, வீட்டுப் பராமரிப்பு, பூஜை, சுகாதாரப் பானங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
மாவட்டங்கள்
மத்திய அரசின் knowindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விவரங்களின் படி இந்தியாவில் 716 மாவட்டங்கள் உள்ள நிலையில் பதஞ்சலி நிறுவனத்தில் விற்பனையாளர்களாக மட்டுமே 35,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹோம் டெலிவரி
பதஞ்சலி நிறுவனம் வீட்டிற்கே பொருட்களை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 100 நபர்களைப் பணிக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தகுதி
பதஞ்சலி நிறுவனத்தில் குறைந்தது 12 வது தேர்ச்சி, பி.ஏ. / எம்.ஏ. / எம்பிஏ போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எப்எம்சிஜி துறையில் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பதஞ்சலி தெரிவித்துள்ளது.
சம்பளம்
பதஞ்சலி நிறுவனம் ஊழியர்கள் பணிபுரியும் நகரங்கள் மற்றும் தகுதிக்கு ஏற்றவாறு 8,000 முதல் 15,000 ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தேர்வு மற்றும் பயிற்சி முகாம்கள்
பதஞ்சலி நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2018 ஜூன் 23 முதல் 27 வரை பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் 2018 ஜூன் 22-க்குள் வேலைவாய்ப்பிற்குப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வேலை வாய்ப்பு அறிவிப்பில் போலியான நபர்களை யாரும் அணுகாமல் அருகில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் / நிர்வாகிகளின் மொபைல் எண்களைத் தொடர்புகொள்ளவும் என்று தெரிவித்துள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம்
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர் கட்சிகள் மோடி அரசினை சாடி வரும் நிலையில் மோடியின் ஆதரவாளரான பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பானது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.