பயணியர் பெட்ரோல் வாகனங்களில் 15 சதவீதம் எத்தனால் கலந்து இயக்குவதைக் கட்டாயமாக்க நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால் மாதாந்திர பெட்ரோல் செலவில் 10 சதவீதம் மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது..
ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை செயலாளர் சின்ஹா சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
செலவினத்தைக் குறைக்க முடிவு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பெட்ரோல், டீசலை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் இறக்குமதிக்கான செலவினத்தில் 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆதலால் போக்குவரத்து மற்றும் சமையலில் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கலாம் எனக் கருதுகிறது.
எத்தனால் விலை குறைப்பு
தற்போது இந்தியாவில் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எத்தனாலை, 20 ரூபாயாகக் குறைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளது. இதனால் எத்தனால் நுகர்வை அதிகரிக்க நிதிஆயோக் முடிவு செய்துள்ளது.
சவால்கள்
எத்தனால் கலந்து இயக்குவதற்கு வசதியாக வாகன எந்திரங்களில் போதுமான மாற்றங்கள் செயவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 18 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்து 4 சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாக இந்திய ஆட்டோ மெபைல் தயாரிப்பு சங்கத்தின் இயக்குநர் விஷ்ணு மாத்தூர் கூறியுள்ளார்.
தீர்வு காண ஆலோசனை
தொழில்நுட்ப ரீதியாக எத்தனால் கலந்து இயக்குவது சாத்தியமான ஒன்று தான் என்று தெரிவித்துள்ள இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரி ராம்குமார், கலப்பு எரிபொருளின் தன்மை மற்றும் இயந்திரத்தில் பொருந்துமா என்ற சவால்கள் உள்ளதாகக் கூறினார். எண்ணெய் நிறுவனங்களும், வாகன உற்பத்தியாளர்களும் இணைந்து இதற்கு ஒரு தீர்வு காண முடியும் என்று நம்புகிறார்கள்.
எத்தனால் உற்பத்தி
நிலக்கரி மற்றும் உயிர் ஆதாரங்களில் இருந்து மெத்தனால் தயாரிக்கவும் இதன் மூலம் தேவையைப் பூர்த்திச் செய்ய முடியும் என அரசு நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நூறு கோடி ரூபாய் செலவில் நிலக்கரி மூலம் எத்தனாலை எடுக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் செலவினம்
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான செலவு 5 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 2900 கோடி ரூபாய் பெட்ரோலும், 9000 கோடி ரூபாய் டீசலும் நுகர்வாக உள்ளது.
நோக்கம்
எரிபொருள் செலவையும், நாட்டின் எண்ணெய் இறக்குமதியையும் குறைப்பதோடு, காற்று மாசையும் குறைக்கலாம் என நிதி ஆயோக் நம்பிக்கை கொண்டுள்ளது.