பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்த மெஹூல் சோக்சி இதுநாள் வரையில் எங்கு உள்ளார் எனத் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் அன்டிகுவா தீவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மெஹூல் சோக்சியை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை திட்டமிட்டு வரும் நிலையில், அன்டிகுவா நாட்டில் எப்படி, எந்த அடிப்படையில் சோக்சிக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது எனக் கேள்வி கேட்டக்ப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
இதற்குப் பதில் அளித்துள்ள அன்டிகுவா குடியுரிமை வழங்கும் அமைப்பு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் சோக்சி குறித்துச் சிறப்பான அறிக்கையைக் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தான் அன்டிகுவா தீவில் இவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மெஹூல் சோக்சியின் விண்ணப்பம்
அன்டிகுவா குடியுரிமை அமைப்புக்குச் சட்டம் 5(2)(b) கீழ் முதலீட்டு விதிகள் 2013 உட்பட்டு ஆன்டிகுவா மற்றும் பார்பூடா குடியுரிமை பெற மே மாதம் 2017இல் தேவையான ஆவணங்களுடன் மெஹூல் சோக்சியின் விண்ணப்பம் வந்துள்ளது. இதில் காவல் துறை அறிக்கையும் அடக்கம்.
முக்கிய ஆவணங்கள்
இந்திய அரசு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் கிளியரென்ஸ் சான்றிதழ், வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் மும்பை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், செபி அமைப்பு என 3 முக்கியத் தரப்புகள் அளித்துள்ள ஆவணங்களில் எதிலுமே அவர் வெளிநாட்டிற்குச் செல்ல பிரச்சனை இருப்பதாகத் தெரிவிக்கவில்லை.
நவம்பர் 2017
இப்படியிருக்கும் போது தான் அனைத்து விதிமானச் சோதனைகளும் செய்யப்பட்டு நவம்பர் 2017இல் மெஹூல் சோக்சிக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாக ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.