2014 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது மோடி அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன் தொடங்கப்பட்ட திட்டம்தான் முத்ரா (Mudra scheme). இத்திட்டம் இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களில் 90%-க்கும் மேல் சிறு கடன்களாகும். அதாவது 50,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு ஏற்றதாக இல்லை எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாள் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜ்னா (PMMY) திட்டம் இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் உன்னதத் திட்டம் எனப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகப் பெறப்பட்ட தகவலின் படி, இத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட 90%-க்கும் மேற்பட்ட கடன்கள் சிறு கடன்கள் எனத் தெரிய வந்திருக்கிறது. இக்கடன் தொகை வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்குப் போதுமானதாக இல்லை என்னும் கருத்து நிலவுகிறது.
விமர்சனம்
பாராளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, " வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்னும் தேர்தல் வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை" எனக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடி அவர்கள் " முத்ரா திட்டத்தின் மூலமாக 13 கோடி இளைஞர்களுக்குக் கடன் அளித்துள்ளதாகக்" குறிப்பிட்டார். தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி பிரசாத் அவர்கள், "4 இலட்சம் கோடி ரூபாய் கடன் 80 மில்லியன் மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் " குறிப்பிட்டார்.
அருண் ஜேட்லி
2015 ஆம் ஆண்டுப் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள், "முத்ரா திட்டம் மூலமாக மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்படும். "சிசு" திட்டத்தின் ('Shishu') மூலமாக 50,000 வரையிலும், "கிஷோர்" திட்டத்தின் ('Kishore') மூலமாக 50,000 முதல் 5 இலட்சம் ரூபாய் வரையிலும், தருண் திட்டத்தின் ('Tarun') மூலமாக 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முத்ரா திட்டம்
வளரும் இளம் தலைமுறையினர், திறன் பயிற்சி பெற்றோர், பட்டதாரிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் முத்ரா திட்டம். எனவே, இத்திட்டத்தின் மூலமாகக் கடன் கோருபவர்களிடம், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்திரவாதம் தொடர்பாக வங்கிகள் அழுத்தம் கொடுப்பதில்லை.
கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
முத்ரா திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் கடன் பெற்றுள்ளனர்? எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது? என்னும் கேள்விகளை இந்தியா டுடே நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டு அதற்கான பதில்களைப் பெற்றது. முத்ரா திட்டத்தில் உள்ள மூன்று வகையான திட்டங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது? குறிப்பாக 10 இலட்சம் வரை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர் ? என்னும் வகையான துணைக் கேள்விகளையும் கேட்டிருந்தது.
பதில்
இக்கேள்விகளுக்கான பதில்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிடைத்தன. முத்ரா திட்டத்தின் கீழ் 93% கடன்கள் "சிசு" திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது அதிகப்பட்சமாக 50,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது. கடன் வழங்கப்பட்ட 13.5 கோடி பேர்களில் 12.2 கோடி பேர்களுக்கு "சிசு" திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது போன்ற சிறு கடன்கள் சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும். வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்குப் போதுமானதாக இருக்காது எனப் பொருளாதார நிபுணர் அஜித் ராணடே கூறுகிறார்.
வெளியாகாத தகவல்
1.4 கோடிக்கு மேற்பட்ட கடன்கள் கிஷோர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது 50,000 ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது. 19.6 இலட்சக் கடன்கள் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த கடனில் 1.45 % மட்டுமே குறிப்பிடத் தகுந்த கடன் தொகையாக உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகப்பட்சக் கடன் தொகையான 10 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையை நிதித்துறை வெளியிடவில்லை. அதே போல இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை எவ்வளவு, திரும்பச் செலுத்தப்பட்ட தொகை எவ்ளவு போன்ற தகவல்களும் கிடைக்கவில்லை.